Header Ads



கிறிஸ்சேர்ச் தாக்குதலின் பின்புலங்கள் - பாசிசத்தின் மறுபிறப்பா...?

இந்தத் தாக்குதல் ஒரு கொடூரமான குற்றம், இனவாதம் மற்றும் தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் உந்தப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தின் செயலாகும். இது ஒரு நியூசிலாந்து நிகழ்வு மட்டுமல்ல, ஆனால் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளதும், அரச அமைப்புகளின் உயர்ந்த மட்டங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற வலதுசாரி, பாசிச வலையமைப்புக்களின் எழுச்சியின் விளைவாகும்.

டாரன்ட் சர்வதேச அளவில் தீவிர வலதுசாரி, குடியேற்ற எதிர்ப்பு குழுக்களின் ஆதரவாளர்களிடம் இருந்து அவருடைய உந்துதல்களை வளர்த்தார். டாரன்ட் இன் தலையின் மீது பொருத்தப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவியில் இருந்து தெரிந்த அல் நூர் மசூதி தாக்குதலின் ஒளிப்பதிவு காட்சிகள் பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பப்பட்டது. தற்போது அகற்றப்பட்டுள்ளது.

அந்தக் காட்சிகள் துப்பாக்கிதாரி மசூதியை வந்தடைந்து கட்டிடத்திற்குள் நுழைந்து அவரது கொடூரமான மற்றும் திட்டமிடப்பட்ட படுகொலைகளை மேற்கொண்டார் என்பதைக் காட்டுகிறது. சிறிய குழந்தைகள் உள்ளடங்கலாக பாதுகாப்பற்ற பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கி தோட்டா மழை தாக்குதலில் இருந்து தப்புவதற்கு சிறிது வாய்ப்புகூட இருக்கவில்லை.

பல விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை என்றாலும், இது ஒரு திட்டமிடப்படாத அல்லது "காரணமில்லாத" செயலாக கருதுவதற்கில்லை என்பது தெளிவாகிறது. டாரண்ட் ஆல் இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு 73 பக்க “விளக்க அறிக்கை" படி, அவர் ஐரோப்பாவில் சில காலம் வாழ்ந்த பின்னர் தாக்குதலைத் திட்டமிடுவதற்கு இரண்டு ஆண்டுகள் செலவிட்டுள்ளார்.

"மாபெரும் மாற்றீடு" என்ற தலைப்பில், இந்த அறிக்கையானது, டாரன்ட் ஒரு வெள்ளை மேலாதிக்கவாதி அத்துடன் தன்னை ஒரு "பாசிசவாதி" என்றும் கருதினார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாமிய விரோத பாரபட்சத்தால் தூண்டிவிடப்பட்டு டசன் கணக்கான இளைஞர்களையும் குழந்தைகளையும் 2011 ல் நோர்வேஜியன் தொழிற் கட்சி முகாமில் கொலைசெய்த பாரிய படுகொலையாளரான ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரைவிக் இனை இந்த ஆவணம் பாராட்டியுள்ளது. பிரைவிக் உடன் "சுருக்கமான தொடர்பு" இருந்ததாகவும், நியூசிலாந்தின் தாக்குதலுக்கு அவரிடமிருந்து "ஆசீர்வாதம்" கிடைத்திருந்ததாகவும் டாரன்ட் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை "புதுப்பிக்கப்பட்ட வெள்ளை இனத்திற்கான சின்னமாகவும் மற்றும் பொதுவான நோக்கத்திற்கான அடையாளமாக" டாரன்ட் பாராட்டினார். "நாங்கள் குடியேறிகளை நசுக்க வேண்டும் அத்துடன் ஏற்கனவே நம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த “படையெடுப்பாளர்களை,” வெளியேற்ற வேண்டும் என்று ட்ரம்ப்பை போல புலம்பெயர்ந்தோரை "படையெடுப்பாளர்கள்" என்று விபரித்தார்.

ஆச்சரியப்படும் வகையில் நியூசிலாந்தோ அல்லது அவுஸ்திரேலிய போலீஸோ அல்லது வேறு முகாமைகளோ டாரன்ட் அல்லது கைது செய்யப்பட்ட மற்றையவர்களை இதற்கு முன் அறிந்திருக்கவில்லை என்று நியூசிலாந்து பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ் தெரிவித்தார். அவர்களை எந்த தீவிரவாத "கண்காணிப்பு பட்டியல்களிலும்" பார்க்கக்கூடியதாக இல்லை. இது உண்மையாக இருந்தால், அரச அதிகாரிகள் தீவிர வலதுசாரி வலையமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போலும் மற்றும் இதற்கு உடந்தையாக உள்ளனர் என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

போலீசாரின் கவனத்திற்கு வராமல், அத்தகையதொரு தாக்குதல் பல ஆண்டுகளாக எவ்வாறு திட்டமிட முடியும் என்பது பற்றிய எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் ஆயுதங்களை எவ்வாறு பெற்றுள்ளார்கள் என்பது பற்றியும் கேள்விகள் எழுகின்றன. நியூசிலாந்து துப்பாக்கி பதிவுமுறையை கொண்டிருக்கவில்லை, மேலும் 5 மில்லியனுக்கும் குறைவான மக்கள் உள்ள நாட்டில் 1.3 மில்லியன் சட்டபூர்வமான சொந்தமான ஆயுதங்கள் உள்ளன.

உண்மையில், இந்த தாக்குதல் ஏகாதிபத்திய வன்முறை மற்றும் அதிகரித்து வரும் தேசியவாதம், வெளி நாட்டினர் மீது காட்டும் வெறுப்பு மற்றும் இனவெறி ஆகியவற்றால் குணாதிசயப்படும் ஒரு உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் நடந்தது.

அமெரிக்கத் தலைமையிலான ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவின் போர்களில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய பங்கேற்பு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாகப் பின்தொடர்கிறது. ஆப்கானிஸ்தானில் பொதுமக்களுக்கு எதிரான பல படுகொலைகள் மற்றும் அட்டூழியங்கள் ஆகியவற்றில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவின் துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கனடாவின் கியூபெக் நகரில் ஒரு மசூதியில் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வை தூண்டி எரியவிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய தீவிர வலதுசாரி சுயேட்சை செனட் உறுப்பினர் பிரேசர் அன்னிங், கிறிஸ்ட்சேர்ச் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டி ஒரு பாசிச ஊடக அறிக்கையை வெளியிட்டார்.

முஸ்லிம் குடிவரவை தாக்குதலின் "உண்மையான காரணம்" என்று விவரித்தார். அன்னிங் சமீபத்தில் பிரபல அவுஸ்திரேலிய நவ-நாஜிக்களால் செயின்ட் கில்டா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டார்.

முஸ்லீம்களுக்கும் ஆசிய புலம் பெயர்ந்தோர்களுக்கும் எதிரான நோக்கம் கொண்ட ஒரு தெளிவான தொனியாக, கடந்த ஆண்டு, நியூசிலாந்து முதல் கட்சி (NZ First) புதிதாக குடியேறியவர்களுக்கு நிர்வகிக்கப்படும் ஒரு "நியூசிலாந்து மதிப்புகள் சோதனை" என்று அழைப்பு விடுத்தது. "பெண்கள் எனப்படுபவர்கள் கால்நடைகள் மற்றும் இரண்டாம் தர குடிமக்கள்" என நம்பும் குடியேறியவர்களை இது நிறுத்தும் என்று பீட்டர்ஸ் கூறினார். மற்றொரு நியூசிலாந்து முதல் கட்சியின் உறுப்பினர் ரோஜர் மெல்வில், "பாகிஸ்தான், இந்தியா மற்றும் சில ஆசிய வகை நாடுகளில் உள்ள" மக்கள் "தங்கள் வழிகளை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள்" என்று அறிவித்தார்.

கிறிஸ்ட்சேர்ச் தாக்குதல் எதிர்வரவுள்ள ஆபத்துக்களை பற்றிய ஒரு ஆபத்தான எச்சரிக்கையை வழங்குகிறது. 1930 களுக்குப் பின்னர் முதலாளித்துவம் அதன் மிகப் பெரிய நெருக்கடிக்குள் தட்டுத்தடுமாறி செல்கையில் பாசிசத்தின் மறுபிறப்பிற்கான அடித்தளத்தை வழங்க, நச்சு தேசியவாதம், இராணுவவாதம் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு இனவெறி ஆகியவற்றிற்கான சூழ்நிலை சர்வதேச அளவில் தூண்டப்பட்டு வருகிறது.

Roomy Abdul Azeez

No comments

Powered by Blogger.