Header Ads



சண்டை பிடிப்பதில்லை - மலிங்க, திஸர பெரேராக்கிடையே இணக்கப்பாடு

சமூகவலைத்தளங்களில் மீண்டும் பரஸ்பரம் தாக்குதல்களிருக்காதென இலங்கையணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மலிங்கவும் சிரேஷ்ட சகலதுறைவீரர் திஸர பெரேராவும் இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமைத்துவத்துக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், தனது இறுதி ஓவரில் 34 ஓட்டங்களை திஸர பெரேரா வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இலங்கையணியின் வீரரொருவர், இலங்கையணி வீரராக தனது நிலையை உறுதிப்படுத்துவதற்கு விளையாட்டமைச்சரை சந்தித்திருந்தார் என மலிங்கவின் மனைவியின் பேஸ்புக் கணக்கில் பதியப்பட்டிருந்தது.

பெயர் குறிப்பிடப்படாதபோதும் பண்டாவின் படமொன்றை பதிவேற்றிய மலிங்கவின் மனைவி, “பாவம் பண்டா” என்ற தலைப்புடன் பிரசுரித்தாகக் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, குறித்த பதிவுக்கான பதிலளிப்புகள் திஸர பெரேராவின் பேஸ்புக் கணக்கில் காணப்பட்டுள்ளது.

இது தவிர, தான் அதிரடியாக சதம் பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்பதாக, அணியில் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள தான் யாரையும் அணுகவேண்டிய தேவையில்லை என தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.