Header Ads



உள்நாட்டு தபால் கட்டணங்கள் நாளைமுதல் அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)


இலங்கையில் உள்நாட்டு தபால் கட்டணங்கள் எதிர்வரும் நாளை (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


2026 ஆம் ஆண்டிற்கான தபால் கட்டணத் திருத்தத்தின் கீழ் பல சேவைகளுக்கான விலைகள் மாற்றப்பட்டுள்ளன.

புதிய கட்டண மாற்றங்களின் பிரதான விபரங்கள் வருமாறு:


கடிதங்கள் மற்றும் பதிவுத் தபால்


• சாதாரண கடிதங்கள்: இதுவரை 20 கிராம் ஆக குறிப்பிடப்பட்ட கடிதங்களுக்கான அடிப்படை நிறை வகுப்பு தற்போது 30 கிராம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கட்டணம் 70 ரூபா ஆகும்.


• பதிவுத் தபால் (Registration): கடிதங்களைப் பதிவு செய்வதற்கான மேலதிக கட்டணம் 60 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ரூ. 60 + 70)


• அரச சேவைகள்: அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களினால் அனுப்பப்படும் பதிவுத் தபால் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) ரூ. 130


• கொழும்பு நகர எல்லை: கொழும்பு 1 முதல் 15 வரையான நகர வலயங்களுக்குள் மத்திய தபால் பரிமாற்றகத்தினூடாக விநியோகிக்கப்படும் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) 50 ரூபா விசேட கட்டணம் வசூலிக்கப்படும்.


ஏனைய தபால் சேவைகள்


• தபால் அட்டை (Postcard): ஒரு தபால் அட்டையின் புதிய கட்டணம் ரூ. 40 ஆகும்.


• தபால் அடையாள அட்டை: தபால் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான சாதாரண கட்டணம் ரூ. 50 ஆகவும், ஒருநாள் சேவைக்கான கட்டணம் ரூ. 200 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.


• பொதி மற்றும் கூரியர்: 250 கிராம் வரையிலான சாதாரண பொதிகளுக்கு ரூ. 150, ‘SL Post Courier’ சேவை ஊடாக அனுப்பப்படும் அதே எடையுள்ள பொதிகளுக்கு ரூ. 200 அறவிடப்படும்.


• அச்சுப் பொருட்கள்: 30 கிராம் வரையிலான அச்சுப் பொருட்கள் அல்லது திறந்த பொதிகளுக்கு ரூ. 45 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


• பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள்: தபால் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளைத் தபாலில் அனுப்புவதற்கு (60 கிராம் வரை) ரூ. 40 அறவிடப்படும்.


பணம் மற்றும் தந்தி சேவைகள்


• தந்தி (Telemail): தந்தி சேவைக்கான ஆரம்பக் கட்டணம் (முதல் 10 சொற்களுக்கு) ரூ. 50 ஆகவும், மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூ. 5 அறவிடப்படும்.


• பண அனுப்பல் கட்டணம் (Money Orders): தபால் நிலையங்கள் ஊடாக அனுப்பப்படும் பண விநியோகங்களுக்கான (PMT) தரகுப் பணம் (Commission) அதன் பெறுமதிக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ. 2,000 வரையான பணத்திற்கு ஒவ்வொரு ரூ. 100 இற்கும் ரூ. 2 வீதம் அறவிடப்படும்.


அனைத்து தபால் நிலையங்களும் இந்தப் புதிய கட்டண முறைக்கேற்ப செயற்படுமாறும், பொதுமக்கள் இது குறித்துத் தெளிவுபெறுமாறும் அனைத்து தபால் நிலையங்கள் உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சுற்றுநிருபம் மூலம் தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டப்ளியூ.எம்.ஆர்.பீ. சத்குமாரவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.