ஜனாதிபதி மீது 70 சதவீத மக்கள் விருப்பம் - வடக்கிலும், கிழக்கிலும் அமோகம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது 70 சதவீத மக்கள் விருப்பம் கொண்டுள்ளதாக சமூக விஞ்ஞானிகளின் சங்கம் நடத்திய புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பு பொரளை என்.எம். பெரேரா மையத்தில் நேற்று (18.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நிர்மல் ரஞ்சித் தேவசிறி இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்குப் பின்னரும் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மீதான மக்கள் ஆதரவு குறையவில்லை என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம் அரசாங்கத்தின் ஏனைய அரசியல்வாதிகளுக்கு 45.75 சதவீத ஆதரவும், எதிர்க்கட்சிக்கு 23.6 சதவீத ஆதரவும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண ரீதியாகப் பார்க்கும்போது, ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வட மாகாணத்தில் 86 சதவீதமும், கிழக்கு மாகாணத்தில் 89 சதவீதமும், வடமேல் மாகாணத்தில் 97 சதவீதமும் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
முன்னைய காலங்களில் ஒரு நாட்டின் தலைவருக்குச் சிங்கள மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருந்தால் ஏனைய இன மக்கள் மத்தியில் குறைந்த ஆதரவே காணப்படும். ஆனால், தற்போதைய ஜனாதிபதிக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான மக்கள் ஆதரவு காணப்படுவது நாட்டின் எதிர்கால அரசியலில் மிக முக்கியமான ஒரு மாற்றமாகப் பார்க்கப்படுவதாக நிர்மல் ரஞ்சித் தேவசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment