தீக்கிரை சம்பவத்தில் தயாசிறி முன்னிலை வகித்தார், இவர் யாரென்பதை முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள்
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
குருநாகல் -ஹெட்டிபொல நகரம் தீக்கிரையான சம்பவத்தில் தயாசிறி ஜயசேகர முன்னிலை வகித்தார். இவர் யார் என்பதை முஸ்லிம் மக்கள் நன்கு அறிவார்கள். எமது சமூகம் இவரை ஒருபோதும் ஏற்காது என்று தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, என்மீது போலியான, பாரதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இனவாதத்துடன் நான் ஒருபோதும் செயற்படவில்லை. ஹெட்டிபொல பகுதி முஸ்லிம் மக்களை நான் காப்பாற்றினேன். இந்த குற்றச்சாட்டை மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன் கிழமை நடைபெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முஸ்லிம் மக்கள் ஒருசில விடயங்களை முன்வைத்தார். அநீதி இழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முயற்சிக்கிறோம்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை அனைவரும் நன்கு அறிவோம். ஹெட்டிபொல நகரம் தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கு இவர் தான் முன்னிலை வகித்தார். இவரை முஸ்லிம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த சம்பவத்தை இவர் மறந்து விட்டாரா அல்லது மாற்றமடைந்து விட்டாரா என்பது தெரியவில்லை.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய தயாசிறி ஜயசேகர இவர் என்மீது போலியான, பாரதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இனவாதத்துடன் நான் ஒருபோதும் செயற்படவில்லை. ஹெட்டிபொல பகுதி முஸ்லிம் மக்களை நான் காப்பாற்றினேன்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே தெரியாத விடயங்கள் பற்றி பேச வேண்டாம். இந்த குற்றச்சாட்டை மீளப் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது நீக்கிக் கொள்ளுங்கள். முஸ்லிம் சமூகத்துக்கு இந்த அரசாங்கத்தால் இழைக்கப்படும் அநீதி பற்றியே பேசினேன். ஆகவே தெரியாத விடயங்களை பேசாதீர்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எம்.கே.எம்.அஸ்லம், நான் பிறிதொரு மாவட்ட உறுப்பினரல்ல, குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவன். ஹெட்டிபொல நகரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையாக அறிவேன். இவரது செயற்பாட்டையும் நன்கு அறிவேன். ஆகவே இவர் மீது முன்வைத்த குற்றச்சாட்டை ஒருபோதும் மீளப்பெற்றுக்கொள்ள போவதில்லை என்றார்.- Vidivelli
Post a Comment