பலஸ்தீனியர்களுக்கான எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் - இஸ்ரேலால் திருப்பி அனுப்பப்பட்ட கிரேட்டா தன்பர்க்
பலஸ்தீன் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளுடன் பயணித்த 'ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா' கப்பலில் இருந்த கிரெட்டா தன்பெர்க் உட்பட நான்கு சமூக செயற்பாட்டாளர்களை சியோனிச இஸ்ரேல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியிருந்தது.
பாரிஸில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தன்பெர்க், "எங்கள் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை; அது தொடரும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். "நாங்கள் இஸ்ரேலால் சட்டவிரோதமாகத் தாக்கப்பட்டு, கடத்தப்பட்டு, பின்னர் சிறைவைக்கப்பட்டோம். எங்களுடன் பயணித்தவர்களில் சிலர் இன்னமும் அங்கேயே உள்ளனர். அவர்களின் நிலைமை குறித்து மிகுந்த நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது," என்று கிரெட்டா வேதனையுடன் கூறினார்.
ஃபலஸ்தீனத்திலும், குறிப்பாக காஸாவிலும் மக்கள் தற்போது அனுபவித்து வரும் துயரமான சூழ்நிலைகளுடன் ஒப்பிடுகையில், இஸ்ரேலில் தாங்கள் சந்தித்த சிரமங்கள் அற்பமானவை என்றும் கிரெட்டா தெளிவுபடுத்தினார்.
"காஸாவுக்குச் சென்று அத்தியாவசிய உதவிகளை விநியோகிப்பதே எங்கள் முதன்மை நோக்கமாக இருந்தது. இந்தத் திட்டத்தில் உள்ள அபாயங்கள் குறித்து நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். நாங்கள் இத்துடன் இதை நிறுத்தப் போவதில்லை என்பது உறுதி. இது ஃலஸ்தீனியர்களுக்கான எங்கள் வாக்குறுதி, எங்களால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்வோம்," என்று கிரெட்டா உறுதிபட தெரிவித்தார்.
பாரிஸில் இருந்து கிரெட்டா தனது பூர்வீக நாடான ஸ்வீடனுக்குப் புறப்படுவார். பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து கிரெட்டாவை விமானத்தில் ஏற்றி அனுப்பும் புகைப்படத்தை சியோனிச இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது.
இதற்கிடையில், நாடு கடத்தும் ஆவணங்களில் கையெழுத்திட மறுத்த எட்டு சமூக ஆர்வலர்கள் சியோனிச இஸ்ரேலில் தங்கியுள்ளதாக சியோனிச இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசனும் இதில் அடங்குவார். இவர்கள் ராம்லேயில் உள்ள கிவோன் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஸாவில் சியோனிச இஸ்ரேல் நிகழ்த்தி வரும் பட்டினிச் சாவுகளை உலக அரங்கின் கவனத்திற்குக் கொண்டுவர, 'ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா' கூட்டமைப்பு 'மேட்லின்' என்ற படகில் இத்தாலியில் இருந்து காஸாவுக்குப் பயணம் மேற்கொண்டது. எனினும், காஸாவை அடைவதற்கு முன்பே சியோனிச இஸ்ரேல் அவர்களை வழிமறித்து, கடத்தி சிறையில் அடைத்தது.
Thejas News
Post a Comment