Header Ads



எப்போதும் மறக்கக் கூடாத உண்மை என்ன தெரியுமா..?


ரோமானியச் சிறையில் இருந்த அபூ லூலுஆ எனும் நெருப்பு வணங்கியைக் காப்பாற்றி மதீனாவில் சங்கையுடன் வசிக்க வைத்தனர் முஸ்லிம்கள்.
ஆனால் அவன் அதிகாலைத் தொழுகையில் ஈடுபட்டிருந்த உமர் (ரலி) அவர்களை கொலை செய்தான்.
முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இப்னு ஸபா எனும் நயவஞ்சகன் முஸ்லிம்களை நம்ப வைத்து, முஸ்லிம்களுக்கு எதிராகவே கலகம் செய்து, குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த உஸ்மான் (ரலி) அவர்களை கொலை செய்தான்.
அப்போதும் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு மிக்க பக்திமானாக தன்னை காட்டிக்கொண்ட இப்னு முல்ஜிம் என்பவன், தொழுகைக்கு சென்றுகொண்டிருந்த அலீ (ரலி) அவர்களைக் கொலை செய்தான்.
அப்போதும் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஹஸன் (ரலி) அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து, வேலைக்காரனே விஷம் கொடுத்துக் கொன்றான்.
அப்போதும் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இப்னு ஸியாதின் படை அப்பாவி ஹுஸைன் (ரலி) அவர்களை வஞ்சித்துக் கொன்றது. அவரது தலையை தனியே துண்டித்து எடுத்தது.
அப்போதும் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.
சிலபோது மதத்தின் பெயரால்...
சிலபோது தேசத்தின் பெயரால்...
சிலபோது பதவி வெறியால்...
சிலபோது முஸ்லிம்கள் மீதான துவேஷத்தால்..
ஆளுமை மிக்க தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உண்மை என்னவென்றால், இத்தகைய அநீதிகளையும் அடக்குமுறைகளையும் ஏற்றுக்கொண்டு, அதிகார வர்க்கத்தின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருக்கும் வெகு மக்கள்தான் மோசமானவர்கள், அருவருப்பானவர்கள்.
மறுமையில் அவர்களின் நம்பிக்கைகளும் வாதங்களும் அவர்களைக் காப்பாற்றாது. ஏனெனில், அவை எந்த நன்மையும் இல்லாத வக்கிர நம்பிக்கைகள்.
உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோர் இம்மையிலும் மறுமையிலும் தலைவர்களாகவே இருப்பார்கள்.
ஆனால் அவர்களை கொன்றவர்கள்... உறுதுணையாக இருந்தவர்கள்...
அநீதியைக் கண்டும் அமைதியாக இருந்தவர்கள்...
ஆகியோரை இம்மையிலும் மறுமையிலும் இறைச் சாபம் துரத்திகொண்டே இருக்கும்.
அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் அணு அளவும் அநீதி கிடையாது. அங்கு இவர்களின் நிலையை என்னவென்று சொல்வது?
"உங்களை நரகத்திற்குக் கொண்டு வந்தது எது?'' (74:42) என்று அவர்களிடம் கேட்கப்படும்.
அதற்கு அவர்கள்: "மேலும், சத்தியத்திற்கு எதிராகப் பேசுகிறவர்களுடன் நாங்களும் சேர்ந்து அதில் ஈடுபட்டோம்'' (74:45) என்று சொல்வார்கள்.
எப்போதும் மறக்கக் கூடாத உண்மை என்ன தெரியுமா?
அநீதிக்கு எதிராக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதும், கண்டும் காணாமல் கண்ணடைத்து இருப்பதும்தான்.
ஒருவகையில் இதுவும் அநீதிக்கு உடந்தையாக இருப்பதே.
✍️
நூஹ் மஹ்ழரி

No comments

Powered by Blogger.