Header Ads



வழக்குகள் மீளப்பெறப்பட்டன


உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு என்பன தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த இரு வழக்குகள்  உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (06) மீளப் பெறப்பட்டன.

 

உயர் நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, மேனகா விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் மீள பெற்றுக் கொள்ளப்பட்டன.

 

உள்ளுராட்சி மன்ற விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்கள் இரத்தாகி இருந்த நிலையிலேயே இந்த ரிட் மனுக்கள் இரண்டும் (SC Writ Application 5&7 of 2023) மீளப் பெறப்பட்டன.

 

இவ்விரு வழக்குகளிலும் மனுதாரர்கள் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில்  வாதாடியிருந்தார்.

 

மன்னார் பிரதேச சபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஏ.எச்.எம். இஸ்மத், எம்.ஐ.எம். இஸ்ஸதீன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

தெஹியத்தகண்டிய பிரதேச சபை தேர்தலுக்கான  ஐக்கிய தேசிய கூட்டமைப்பு மனு நிராகரிக்ப்பட்டதை ஆட்சேபித்து அக் கட்சியின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ், டி.எம்.ஆர். பண்டா மற்றும் யூ. புஞ்சி பண்டா ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த வழக்குகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீமுடன் சட்டத்தரணிகளான எம்.ஐ.எம். ஐனுல்லாஹ், அஹமத் இல்ஹாம் காரியப்பர், சத்துரிக்கா பெரேரா ஆகியோர் தோன்றியிருந்தனர். 

 

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் முன்னைய வேட்பு மனுக்கள் இரத்தாகியதால் பிரஸ்தாப  வழக்குகள் இரண்டையும் 6ஆம் திகதி மீளப் பெறவுள்ளதாக, செவ்வாய்க்கிழமை (4) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். 

No comments

Powered by Blogger.