எனக்கு மட்டும் ஏன், இப்படியெல்லாம் நிகழுகிறது..?
ஆர்தர் ஆஷே, பிரபல அமெரிக்க டென்னிஸ் வீரர். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன் எனப் பல போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிகளைச் சுவைத்தார். டென்னிஸ் உலகில் உலகக்கோப்பையை சுவீகரித்த ஜாம்பாவனாக வலம் வந்தவர்.
திடீரென ஒருநாள் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மாரடைப்பு என்றார்கள். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆஷே பிழைத்தார். டென்னிஸ் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.
அந்தப் பெருமூச்சு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி வந்து சேர்ந்தது.
ஆஷேவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தீவிரப் பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீய பழக்கவழக்கங்கள் எதுவும் அவரிடம் இல்லை. அவருக்கு எய்ட்ஸ் எப்படி வந்தது?
ஆய்வுசெய்து பார்த்தபோது அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது ரத்தம் ஏற்றப்பட்டது. அந்த ரத்தம் ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தம்.
விஷயம் தெரிய வந்தபோது ரசிகர்கள் துடிதுடித்துப் போனர்கள்.
அவருடைய ரசிகர்களில் ஒருவர் ஆஷேவுக்குக் இப்படி கடிதம் எழுதினார்,
‘உங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ கடவுள் ஏன் உங்களை இந்த உயிர்கொல்லி நோயால் சோதிக்க வேண்டும்..?
அதற்கு ஆஷே நிதானமாகப் பதில் எழுதினார். ‘உலகில் 5 கோடி சிறுவர்கள் டென்னிஸ் விளையாட விரும்புகிறார்கள். 50 லட்சம் பேரே விளையாடுகிறார்கள். 5 லட்சம் பேரே முறையான பயிற்சியுடன் தேர்ச்சி பெறுகிறார்கள். அவர்களில் 50 ஆயிரம் பேருக்குத்தான் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால் அவர்களில் 5 ஆயிரம் பேரால்தான் விளையாட முடிகிறது. அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் போன்ற சர்வதேசப் போட்டிகளுக்கு வருகிறார்கள்.
அவர்களில் நான்கு பேர்தான் அரை இறுதிக்கு முன்னேறுகிறார்கள். இருவர் இறுதிப் போட்டியில் மோதுகிறார்கள். ஒருவர்தான் கோப்பையை வெல்கிறார்.
அந்த ஒருவராக நான் இருந்தேன். அந்த நேரம், எனக்கு மட்டும் ஏன் கடவுள் தந்தான்? என நான் கேட்கவில்லை!
இப்போது மட்டும் நான் எப்படிக் கேட்க முடியும்?" என்றார்.
அந்த ஆண்டவன் ஒவ்வொரு மனிதருக்கும், ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை வைத்துள்ளான். ஆனால் எல்லோரும் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்கிறோம்!
‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’
உலகத்தில் இருக்கும் அனைவரும் சந்தோஷமாக இருந்து கொண்டிருப்பது போலவும் தனக்கு மட்டும் பிரச்சினை, தனக்கு மட்டும் தோல்வி, தனக்கு மட்டும் சிக்கல் எனவும் நினைத்துக் கொள்கிறோம்.
இங்கே பிரச்சினைகள் அற்ற புனிதமான மனிதர்கள் யாருமில்லை!
இங்கே நாம் நிம்மதியாக வாழ வந்த இடமல்ல! நிம்மதியாக வாழவும் முடியாது. ஆனால் நமக்கு ஆண்டவன் தந்த எண்ணற்ற வரங்களை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடலாம்...!
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment