நீதி கேட்டு முஹம்மது ஹிஸாம், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
தனியார் பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் இன்னும் ஒருவரால் தாக்கப்பட்ட இலங்கைப் போக்கு வரத்துச் சபை பஸ் நடத்துனர் ஒருவர் தனது முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஜனாதிபதியிடம் நீதி கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதம் திங்களன்று ( 27) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சபை வாழைச்சேனை வீதியில் பஸ் நடத்துனராக கடமையாற்றும் அபூதாலிப் முஹம்மது ஹிஸாம் என்பவரே ஜனாதிபதியின் கவனத்திற்கு தனது முறைப்பாட்டைக் கொண்டு சென்றுள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டில் முறைப்பாட்டாளரான முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 2025-01-22 ஆம் திகதி எங்களது பஸ் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பிற்கு சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அன்றைய தினம் பி.ப. 4.30 மணி எமக்கு வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பிற்கான நேரமாகும். இந்நிலையில் எமக்குரிய நேரத்தில் எமது பஸ் வண்டிக்கு முன்னால் EP NB 7021 இலக்க தனியார் பஸ், அவ்விடத்தில் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றிக்கொண்டிந்தார்கள்.
அந்நேரம் நான் பஸ்ஸிற்குள் இருந்த பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிக்கொண்டிருந்தேன். அப்போது தனியார் பஸ்ஸின் சாரதி, நடத்துநர் மற்றும் இன்னும் ஒருவருமாக மூன்று பேர் எமது பஸ்ஸிற்குள் ஏறி வந்து எனக்கு தலையில் அடிக்க முற்பட்டனர் அப்பொழுது நான் தடுத்தேன். அடி எனது கையில் பட்டதோடு, இன்னுமொருவர் பொல்லால் எனது தலையில் அடித்து பின்பு என்னை பஸ்ஸிலிருந்து வெளியில் இழுத்தெடுத்து என்னைத் தாக்கினார்.
தாக்கியவர்கள் என் கையிலிருந்த டிக்கெட் இயந்திரத்தையும் பறித்தெடுத்து என் கையிலிருந்த 2200.00 ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அதன் பின்னர் என்னை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பிற்கு மாற்றி கடந்த 2025-01-24 ஆம் திகதி மாலை வீட்டிற்கு வந்தேன். அவர்கள் என்னைத் தாக்கியதில் எனது இடது தோள் பட்டையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறினார்கள்.
தற்போது இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கிணங்க தனியார் பஸ் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர். மற்றைய இருவரையும் கைது செய்யவில்லை.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே எமது வீதி பஸ் சாரதி, நடத்துனர்களோடு பிரச்சினைப்பட்டுள்ளனர். அதற்கான முறைப்பாடும் உள்ளது. இவர்கள் அடிக்கடி இந்த வழிப்பாதையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றார்கள்.
இது இவ்வாறிருக்க , இதுவரையில் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து வாழைச்சேனை வீதியால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அத்தோடு வீதி முகாமையாளர் தனியார் பஸ் நபர்களோடு சமாதானமாகுமாறு என்னிடம் கூறுகிறார்.
எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு நீதி பெற்றுத் தருமாறு தங்களை மிகத் தயவாய் கேட்டுக்கொள்கிறேன். (இத்துடன் வைத்திய அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.)” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment