மனித கடத்தல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்
மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் மேலும் 14 இலங்கையர்கள் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று (06) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”குறித்த பகுதியில் சிக்கியிருந்த பலர் ஏலவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும் இந்த பிரச்சினை தொடர்ந்தும் நீடித்துச் செல்கின்றது.
இலங்கையிலிருந்து பலர் வெவ்வேறு வழிகளின் ஊடாக மியன்மாருக்குத் தொடர்ந்தும் செல்கின்றனர். அங்குள்ள சில பகுதிகளை உத்தியோகபூர்வமற்ற இராணுவ தரப்பினர் கட்டுப்படுத்துகின்றனர்.
இந்தநிலையில் அங்குள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், இவ்வாறான மனித கடத்தல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்”என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Post a Comment