Header Ads



ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் உறுதி, அதியுச்ச பாதுகாப்பு, 24 மணித்தியாலத்தில் நாட்டிலிருந்து வெளியேறுவார்


ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


ஈரானின் 529 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வருகைக்காக அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மத்தளையிலிருந்து உமாஓவா வரையிலும் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையான 172 கிலோமீற்றர் தரைவழியான பயணத்திற்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் பலத்த பாதுகாப்பை நிலைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நேற்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த ஈரான் ஜனாதிபதி, நாளை -24- காலை மத்தளை விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளார்.


அங்கிருந்து தரை மார்க்கமாக 141 கிலோமீற்றர் தூரம் சென்று உமாஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.


அங்கிருந்து மீண்டும் மத்தளைக்கு வந்து விசேட விமானம் மூலம் மத்தளையில் இருந்து கட்டுநாயக்கவிற்கு செல்லவுள்ளார்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 31 கிலோமீற்றர் தொலைவில் கொழும்பு சென்றடைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


அதன் பின்னர் தரைவழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பும் ஈரான் ஜனாதிபதி, நாளைய தினமே நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.


ஈரானிய ஜனாதிபதி மற்றும் முப்படையினரின் பாதுகாப்பை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் வழங்குவார்கள் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.