Header Ads



ரைஸியின் இலங்கை விஜயம் - அமெரிக்கா எதிர்ப்பு, தீவிர கண்காணிப்பில் இஸ்ரேல்


ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு நேற்றும், நேற்று முன்தினமும் விஜயம் செய்து அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போதான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் நேற்றைய தினம் ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்திருந்தனர்.


ஈரானிய ஜனாதிபதி எதிர்வரும் 24ம் திகதி மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கி, உமா ஓயாவிற்கு விஜயம் செய்வார் எனவும் அதே தினம் அவர் மீண்டும் நாடு திரும்ப உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போதான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தலைமையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.


ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவுப் பிரிவுகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த விஜயத்தின் போது அனைத்து புலனாய்வுப் பிரிவுகளும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் ஈரானிய ஜனாதிபதி ஒருவர் இலங்கை விஜயம் செய்திருந்தார்.


இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அப்போதைய ஈரான் ஜனாதிபதி அஹமட் நிஜாட் ஆகியோர் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.   


இதேவேளை அமெரிக்க தூதரக மட்டத்தில் அதிகாரபூர்வமாக இதுவரையில் எதிர்ப்பு வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.