Header Ads



எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட , முஸ்லிம்களின் ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் - ஹக்கீம்


இது ஒரு நிலைமாறு காலமென்றும், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், சமூகமும்,கட்சியும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருப்பதாகவும் , பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண முடியும் என்ற நம்பிக்கையிருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.


 அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களுக்கான முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுக்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அண்மையில்  உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார் .


கட்சியின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 ஆவது நினைவு தின நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி சாய்ந்த மருதுவில் விமர்சையாக நடைபெறவிருப்பதை முன்னிட்டும்,  கட்சியின் கட்டமைப்பை தொகுதிவாரியாக புனரமைப்பது  தொடர்பிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வார இறுதி நாட்களில் கள விஜயமொன்றை மேற்கொண்டு, அம்பாறை (திகாமடுல்ல)மாவட்டத்திற்கு வந்திருந்தார்.  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்,ஏனைய முக்கியஸ்தர்களும் அதில் இணைந்து கொண்டனர்.


அட்டாளைச் சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,


 நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும்.முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு விட்டால், பெரிய கட்சிகளின் தயவில் தொடர்ந்தும் தங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை.அதற்காக வேற்றுமைகளுக்கு மத்தியிலும் ஒற்றுமைப் பட வேண்டும். இது ஒரு நிலைமாறு காலம்.இந்த நெருக்கடியான சூழ்நிலையில்,பல்வேறு சவால்களுக்கு சமூகமும்,கட்சியும் முகம் கொடுக்க நேர்ந்திருக்கிறது.ஆனால்,பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண முடியுமென்ற நம்பிக்கை இருக்கின்றது.


முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண ஆளுநருமான எம்.எல்.ஏ. எம் .ஹிஸ்புல்லாஹ்வின் மீள் வருகை, கட்சி ஒன்றுபட்டு விட்டது என்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது .கட்சி எப்பொழுதும் பலமாக இருக்க வேண்டும் .தகுந்த காரணங்களைப் பொறுத்து  உறுப்பினர்கள் மீண்டும் உள்வாங்கப்பட வேண்டும். தலைவர்கள் மலிந்து போய் விட்டார்கள். இந்த நிலைமை மாறி, கட்சிக்கு  ஒரு பரந்துபட்ட நிலைப்பாடு இருக்க வேண்டும்.கட்சியில் மீள் இணைபவர்களை பயனுள்ள  மூலதனமாகக் கருத வேண்டும். அவர்களைக் கொண்டு நன்மையடைய வேண்டும்.


 கட்சியைப் பொறுத்தவரை சிலரின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை களையப்படுவதோடு,அவர்களிடத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் ; அவர்களில் சிலரிடமுள்ள விரக்தி மனப்பான்மையைப் போக்க வேண்டும். இந்த ஆட்சியில் மக்கள் அதிக கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி என்பவற்றினால் மக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


  தேர்தல்களை  நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. தேர்தலை நடத்தினால் தோற்றுப் போவார்கள் என்ற எண்ணப்பாட்டில் அதனை காலம் தாழ்த்திக் கொண்டு போகின்றார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த திருகுதாளத்தைச் செய்தாவது தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிக்கும் நிலைப்பாட்டிலேயே இருந்துவருகின்றார். காலப்போக்கில் மக்களும் கூட  , அதற்கு இப்பொழுது  இசைவாக்கம் அடைந்து விட்டனர் என்பது போல தெரிகின்றது.


 இவ்வாறான சூழ்நிலையில் எமது கட்சியை பொறுத்தவரை நாங்கள் எங்களுக்குள்அதிகாரப் போட்டியை கைவிட்டு, கட்சியை வளர்ப்பதற்கு மனப்பூர்வமாக முன்வர வேண்டும். எந்த கட்சியை எடுத்தாலும் அதிகாரத்துக்கு வருவதற்கு தான் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். எங்கள் கட்சியிலும் அதிகார போட்டி இருந்தாலும் கூட ,பிரதேச சபை மட்டத்திலும் மாகாண சபை மட்டத்திலும் பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய நிறைய வாய்ப்புகள் எமது உறுப்பினர்களுக்கு இருந்து வருவதை நினைவூட்ட விரும்புகின்றேன் .


சில இடங்களுக்கு  எம்.பிமார் வர முடியாத நிலையிருந்தது.அவர்களுக்கு வேலி கட்டாதீர்கள்.அவர்களைப் பயன்படுத்தி ஊருக்கு தேவையானவற்றை செய்து கொள்ளுங்கள்.


ஆளும் கட்சியில் இருந்தால் மட்டுமல்ல, எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட , முஸ்லிம்களின் ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான்  என்பதை நான் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கின்றேன் என்றார் .


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம்,வரிப்பத்தான்சேனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது,பொத்துவில், அட்டாளைச் சேனை , ஒலுவில், பாலமுனை ,நிந்தவூர்,மாளிகைக் காடு ,மாவடிப்பள்ளி , நற்பிட்டிமுனை,மருதமுனை மத்திய முகாம், ஆகிய பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மத்திய குழு உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்தார்.அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.



No comments

Powered by Blogger.