Header Ads



சிறுவர்களுடன் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார்


பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்டுன்கா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும்.


இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம்.


அந்த வகையில், இன்று காலை 07:00 மணியளவில் ஆறு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் என மொத்தம் எட்டு பேர் ஒரு கேபிள் காரில் பயணித்தனர். தரையில் இருந்து சுமார் 1200 அடிக்கு மேலே அது செல்லும் போது கயிறு திடீரென அறுந்தது. இதனையடுத்து இந்த கார் அதில் உள்ள பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.


"எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். உள்ளே எட்டு பேர் இருக்கிறோம். நாங்கள் அந்தரத்தில் கடந்த ஐந்து மணி நேரமாக தொங்குகிறோம். ஒரு ஆண் மயக்கமடைந்து விட்டார். ஒரு ராணுவ ஹெலிகாப்டர் வந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பி சென்று விட்டது," என்று உள்ளே சிக்கி கொண்டுள்ள பயணிகளில் ஒருவரான குல்ஃப்ராஸ் அங்குள்ள நிலவரம் குறித்து செல்போனில் தெரிவித்தார்.


"கேபிள் கார் தரையிலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் தொங்குவதால், ஹெலிகாப்டர் உதவியால்தான் மீட்பு நடவடிக்கையை செயல்படுத்த முடியும்," என்று கைபர் பகுதியின் மூத்த அதிகாரி சையத் ஹம்மட் ஹைதர் தெரிவித்தார்.


தற்போது வரை பயணிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லை. ஆறு குழந்தைகள் சிக்கி கொண்டுள்ளதால் இச்சம்பவம் குறித்த செய்தி வெளியானது முதல் எப்படியாவது, அரசு அவர்களை காப்பாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் அனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. இந்த பிள்ளைகளுக்கு எந்தப் பாதுகாப்புமற்ற அரசியல் வாதிகளின் குறுகிய நோக்கத்துடன் செயற்படுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி,அந்த அப்பாவி சிறுவர்களை உடன் பாதுகாத்து இந்த முறையை உடனடியாக இரத்துச் செய்யுமாறு பொதுமக்கள் சார்பாக பாகிஸ்தானிய அரசாங்கத்தை​ வேண்டுகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.