Header Ads



இலங்கையரான BBC ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்


இலங்கையரான பி.பி.சீ சர்வதேச செய்தி சேவையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா தனது 67வது வயதில் காலமானார்.


இவர் பி.பி.சீ செய்தி சேவையின் ஆறு மணிச் செய்திகளை கடந்த 2007ம் ஆண்டு முதல் வாசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய பதற்றமான சூழ்நிலையின் காரணமாக போதியளவு பாதுகாப்பு இல்லை எனக் கருதிய ஜோர்ஜ் அழகையாவின் பெற்றோர் ஆபிரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.


கடந்த 20 ஆண்டுகளாக பிபிசி செய்திகளை வழங்கிவந்த இவர், ருவாண்டா முதல் ஈராக் வரையிலான நாடுகளில் வன்முறைகள் கோலோச்சிய காலத்தில் அந்தந்த நாடுகளில் இருந்து துணிகரமான ஊடக பணியை செய்திருந்தார். இதற்காக அவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டிருந்தது.


நெல்சன் மண்டேலா, டெஸ்மன் டுடு, ரொபர்ட் முகாபே போன்ற பிரபலங்களை ஜோர்ஜ் அழகையா நேர்காணல் செய்துள்ளார்.


1994 இல் ஈராக்கின் குர்துகளுக்கு எதிரான சதாம் குசைனின் இனப்படுகொலையை வெளிப்படுத்தியதில் இவரது ஊடகப்பணி முக்கியானது.


புருண்டியில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அறிக்கை செய்ததற்காக 1994 ஆம் ஆண்டில் மன்னிப்புச் சபையால் ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் அவர் பெயரிடப்பட்டார்.


மேலும் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து அறிக்கை செய்த முதலாவது பிபிசி ஊடகரும் இவர் தான்.


தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா, பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்ளிட்ட பிரமுகர்களையும் இவர் செவ்வி கண்டிருந்தார்.


கடந்த சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இந்த நோயுடன் போராடி இன்று அமைதியான மரணமடைந்தாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.


ஜோர்ஜ் அழகையாவின் மரண செய்தியைக் கேட்டு அனைவரும் நம்பமுடியாத அளவிற்கு வருத்தமாக உள்ளதாக பிபிசி இயக்குநர் தெரிவித்துள்ளார்.


மேலும், “ஜோர்ஜ் அழகையா ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதை விட, அவரது இரக்கம், பச்சாதாபம் மற்றும் அற்புதமான மனிதாபிமானத்தால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.” என பிபிசி குறிப்பிட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.