Header Ads



சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ மத போதகர் நாட்டைவிட்டு தப்பியோட்டம்


பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 14 ஆம் திகதி அவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத் தடையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் கருத்து வெளியிட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.


பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்கவிடம் இந்த உத்தரவை பிறப்பித்த ஜனாதிபதி தெரிவித்தார்.


இதன்படி, போதகரின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய உத்தரவுக்கமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.


ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகர் கூறிய கருத்து தொடர்பான காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


அவர் அங்கு வெளியிட்ட கருத்துக்கள் புத்தரையும் மற்ற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுந்தன.


ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகரின் இந்த கருத்துக்கு எதிராக நவ பிக்கு பெரமுன நேற்று (15) கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.


மதப்போராட்டம் ஏற்படுவதற்கு முன்னர் இந்த போதகரை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்த இவருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கோரி பிவித்துரு ஹெல உறுமய இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.