Header Ads



எத்தனை இலட்சம் ரூபா பிணையில், ரங்கா விடுதலையாகியுள்ளார் தெரியுமா..?


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை, 50 இலட்சம் ரூபா சரீரப் பிணை மற்றும் 20,000 ரூபா பிணையிலும் விடுவிக்குமாறு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கு முன்னர் நீதிமன்ற உத்தரவின்படி வேறு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜே. ஸ்ரீரங்கா, நேற்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்த குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட சம்பவத்துக்கு மறுநாள் வெளிநாட்டுக்குச் சென்ற சந்தேகநபரான இவோன் பெரேராவுடன் சந்தேக நபரும் இணைந்து செயற்பட்டிருந்தாரென நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தனர்.


சந்தேகநபரான ஸ்ரீரங்காவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் கிளர்ச்சியாக உருவெடுத்ததாகவும், பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக அவர் செயற்பட்டு அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு தடைகளை விதித்தாரென குற்றச்சாட்டுகளையும் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் அவர்மீது சுமத்தியிருந்தது.


சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அந்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.


சந்தேகநபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் ஊடகவியலாளர் என்றும் அவர் சுவர்வாஹினி ஊடக வலையமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியென்றும் செய்தி சேகரிப்புக்காகவே அவர், அன்றைய தினம் அங்கு சென்றிருந்ததாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.


அவர் தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும் சம்பவம் இடம்பெற்று 09 மாதங்கள் கடந்துள்ளதால், தமது கட்சிக்காரரை பிணையில் விடுதலை செய்யுமாறும் அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.


அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்ற பதில் நீதவான் இலங்கசிங்க பண்டார, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.


அந்த வழக்கை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments

Powered by Blogger.