Header Ads



நான், என்னால், என்னுடைய, என்ற அகம்பாவம், ஆணவம், சுக்கு நூறாய் நொறுங்கி விழுந்த தருணம்


'முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயில்’ என்றால் யாருக்கும் தெரியாது. 


ஆனால், ‘மம்மூட்டி’ என்றால், தெரியாதோர் இருக்க முடியாது. 


நான்,  என்னால்,  என்னுடைய,  என்ற  அகம்பாவம், ஆணவம், சுக்கு நூறாய் நொறுங்கி விழுந்த தருணம். 


இந்திய திரை உலகின் உண்மையான மெகா சூப்பர் ஸ்டார் மம்மூட்டி Mammootty அவர்களை தமிழ், மலையாளம் மட்டுமின்றி உலகம் முழுவதும் எல்லா தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள். 


மம்மூட்டி எழுதிய, “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்” என்ற நூலில்  பின்வரும் சம்பவத்தை அவர் குறிப்பிடுகிறார்:


ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் வேறு நகரத்திலிருந்து என் வீடு நோக்கி காரில் புறப்பட்டேன். 


புறப்பட்ட சிறிது நேரத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைகிறது என் வாகனம். 


அமைதியாய் என் காரில் ஒலிநாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். 


அந்த அடர் இருளில் மெல்லிய எளிய உருவம் ஒன்று பாதை ஓரம் நின்று கை காட்டியது. 

பார்க்க ஒடிசலான வயசான கிழவர். 

கையில் சிறு விளக்குடனும், 

தலையில் முக்காடுடனும், 

கை நீட்டி நின்று கொண்டிருந்தார்.

'இந்த ராத்திரி வேளையில் யார் என தெரியாமல் வண்டியை நிறுத்தி மாட்டிக் கொள்வானேன்' என, வண்டியை நிறுத்தாமல் சிறிது தூரம் போயிருப்பேன். 


மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத குறுகுறுப்பு. 

அந்த கிழவரின் கண்ணில்தெரிந்த தவிப்பும் கவலையும் ஒரு கணம் என்னை யோசிக்க வைத்தது. 


வண்டியை திருப்பி மீண்டும் அந்தப் பகுதியை அடைந்தேன். 


அந்தக் கிழவர் அங்கேயே தான் நின்றிருந்தார். 


கீழே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். 


இருட்டில் நான் முதலில் அவளை கவனிக்கவில்லை போலும். 


"எங்கய்யா போகணும்?" என்றேன். 


"இல்லைய்யா, இது என் பேத்தி. 


வவுத்து வலி. நெறமாச கர்ப்பிணி.


ரொம்ப நேரமா இங்கேயே நிக்கிறேன். ஒரு வண்டியும் வரலைய்யா" என்றார். 


"சரி, ஏறுங்க" என சொல்லி இருவரையும் ஏற்றிக் கொண்டு ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மனைக்கு விரைகிறேன்.


'இன்னுமா நாம யாருனு இவருக்கு தெரியல?' என்ற யோசனை மட்டுமே என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 


நானும் ஒரு சாதாரண மனிதன் தானே!


'ஒரு வேளை பேத்தி பற்றிய கவலையிலும், இந்த இருளிலும், நம்மை அவருக்கு அடையாளம் தெரியாது போயிருக்கலாம்' என என்னை நான் சமாதானம் செய்து கொண்டேன். 


அந்தப் பெண் கிட்டத்தட்ட மயக்கமுற்ற நிலையிலிருந்தாள். மருத்துவ மனையை அடைந்ததும் செவிலியர்கள் ஸ்ட்ரெச்சரில் அவசரமாக அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு மருத்துவ மனைக்குள்ளே விரைந்தனர். 


அப்போது நான் காரை விட்டு இறங்காததால், செவிலியர்களும் என்னை கவனிக்கவில்லை. 


பிறகு அந்தக் கிழவர் என் அருகில் வந்து,  "ரொம்ப நன்றிய்யா.


அவசரத்துக்கு உதவின. 


இந்தா, 


இத டீ செலவுக்கு வச்சிக்க.."


என என் கையில் ஒரு நோட்டை திணித்தார். 


அந்த ஓட்டை ஒடிசலான, அழுக்கு பிடித்த, எந்த கடையிலும் சிங்கிள் டீ கூட குடிக்க உதவாத,  செல்லாத, ரெண்டு ரூபாய் நோட்டை பார்த்து விட்டு, அவரை ஒரு முறை மீண்டும் ஏறெடுத்து பார்க்கிறேன். 


அவரோ, "சும்மா வச்சுக்கய்யா" என்ற படி மருத்துவமனைக்குள் வேக வேகமாக போய் சட்டென மறைந்து விட்டார். 


ஆம். 


நானும், எனது நடிகன் என்ற கிரீடமும், சுக்கு நூறாய் நொறுங்கி விழுந்த கணம் அது. 


நான் இதுவரை எத்தனையோ தேசிய விருதுகள் வாங்கி விட்டேன். 


ஆனாலும் அதை எல்லாம் விட, இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய்  அந்த ரெண்டு ரூபாய் நோட்டை பாதுகாத்து வருகிறேன்.

No comments

Powered by Blogger.