Header Ads



16 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் - டியூசன் ஆசிரியர் பற்றி மேலதிக தகவல்கள் வெளியாகின


களுத்துறையில் 16 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, பிரதேசத்தை விட்டு ஓடி ஒளிந்திருந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். `


களுத்துறை வடக்கு காலி வீதியிலுள்ள இடமொன்றில் கணித ஆசிரியராக வகுப்புகளை நடாத்திய இவர், சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் போது அனைத்தையும் கைத்தொலைபேசியில் பதிவு செய்து மடிக்கணினியில் சேமித்து வைத்துள்ளார்.


இதனிடையே, ஆசிரியருக்கு தகாத தொடர்பு இருப்பதாக சந்தேகித்த அவரது சட்டத்தரணி மனைவி, களுத்துறை வடக்குப் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், சந்தேகநபரின் மடிக்கணினியை இரகசியமாகப் பரிசோதித்துள்ளார்.


இதன் போது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளைக் கண்டு, சிறுமிகளின் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, இந்த சம்பவம் முதன்முறையாக தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபரின் பதிவான காட்சிகளுக்குகமைய, 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெளிவாகத் தெரியவருவதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளைக் கண்டுபிடித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.


சந்தேகத்திற்குரிய ஆசிரியர் குழுக்களாக வகுப்புகளை நடத்தியுள்ளார், மேலும் சம்பந்தப்பட்ட சிறுமிகள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்கள் என்பதைக் கண்டறிய பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


மேலதிக விசாரணையில், சந்தேகநபர் வகுப்புகளுக்குப் பிறகு மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனது காரில் ஏற்றிச் சென்று, காட்டுப் பகுதியில் உள்ள வெறிச்சோடிய பகுதிகளில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


சில சிறுமிகளின் பெற்றோர் வீட்டில் இல்லாத போது, ​​ஆசிரியர், zoom தொழில்நுட்பம் மூலம் சிறுமிகளை தொடர்பு கொண்டு, சிறுமிகளை ஆடைகளை கழற்றச் சொல்லி, காட்சிகளை கூட பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிகளில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments

Powered by Blogger.