Header Ads



மறவன்புலவு சச்சிதானந்தம் அனுப்பியுள்ள அறிக்கை

 
"வட மாகாண சபையின் உள்ளூராட்சியர், நடுவண் அரசின் நெடுஞ்சாலை ஆட்சியர், பொலிஸார் மூவரும் இணைகின்றாராம். நீதி மன்றத்தை நாடி பண்ணையில் அருள்மிகு நாக பூசணி அம்மன் திருவுருவச் சிலையை அகற்றுவார்களாம்" எனக் கூறியதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். 


நேற்றைய தினம் (15.04.2023) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  என்ன துணிச்சல்? நாகர்களின் நாடு. தமிழ்க் காப்பியம் மணிமேகலை கூறும் நாக நாடு இது. நாகங்களை வழிபடும் நாடு இது. 


நாகத்தை இலிங்கமாகப் பார்த்தால் நாகலிங்கம், அம்மனாகப் பார்த்தால் நாகபூசணி நாகம்மாள், மரமாகப் பார்த்தால் நாகலிங்கப் பூ மரம், வீட்டுக்கு வீடு, கோயிலுக்குக் கோயில் நாக தம்பிரான் வழிபாடு.


சங்கப் புலவர்களுள் ஈழத்தின் நாகநாட்டாரை நாகனார் என்பர். 15-20 சங்கப் புலவர் பெயர்கள் நாகனார் என்றாகும். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்த அருள்மிகு நாகபூசணித் திருவுருவம் வரலாற்றுச் சிறப்புடையது. மகாவம்சம் கூறும் மகோதரனும் குலோதரனும் அவன் முன்னோரும் வழிபட்டது.


அத்திருவுருவத்தை முதலில் அழித்தவர் போர்த்துக்கேயக் கத்தோலிக்கர். ஒல்லாந்தர் காலத்திலும் அருள்மிகு நாகபூசணித் திருவுருவத்தை மீளவைக்கவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் பண்ணையில் அருள்மிகு நாகபூசணித் திருவுருவத்தை மீளமைத்தனர். மகாவமிசம் கூறும் நாக மன்னர்களான மகோதரனும் குலோதரனும் முன்னோரும் வழிபட்ட திருவுருவத்தையே மீளமைத்தனர். 


பண்ணைப் பாலம் கட்ட முன்பு, படகில் மண்டை தீவு, வேலணை, புங்குடு தீவு, நயினா தீவு செல்வோர் பண்ணைக் கடலைக் கடந்தனர். அருள்மிகு நாகபூசணி திருவுருவத்தை வணங்கியே வழிபட்டே படகுகளில் ஏறினர். அங்கிருந்து படகுகளில் வந்து கரையிறங்கி யாழ்ப்பாணம் செல்வோரும் வணங்கி வழிபட்டு மாநகர் புக்கனர். பழைமை வாய்ந்தது. புத்தர் வருமுன்பே நாகர்களின் வழிபடும் திருவுருவமானது. அண்மைய 30 ஆண்டுப் போர்க்காலத்தில் சிதறிச் சின்னா பின்னமாகியது. மீளவைத்தவர் நாகர்களின் தோன்றலரான நம்பிக்கையாளர். 



என்ன துணிச்சல் ஆட்சியாளருக்கு? அகற்றுவார்களாம். வரலாற்றை அழிப்பார்களாம். நாக மரபை நம்பிக்கை ஒளியை அருள் பெருக்கத்தை அழிப்பார்களாம். 300 சைவக் குடும்பங்கள். வழிபாட்டிடம் அருள்மிகு பிள்ளையார் கோயில். அந்த வளாகத்துள் அரச அமைச்சர் ஆதரவுடன் மதவெறியர் புத்தப் பள்ளியும் பல்சாலையும் கட்டினர்.



புத்த சமயத்தவர் ஒருவரும் வாழாத கொக்கிளாயில் நிகழ்ந்த இந்த அத்துமீறலை, அடாவடித்தனத்தை அட்டூழியத்தை அகற்ற முதுகெலும்பில்லாத அரச இயந்திரம், நாகர்களான சைவர்களின் பல்லாயிரமாண்டுப் பண்ணைப் பராம்பரியத் திருவுருவத்தை அகற்ற நீதிமன்றத்தை நாடுவராம்.


சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச நிலம். அங்கே மதவெறியரின் வேளாங்கண்ணிக் கத்தோலிக்கத் தேவாலயம். பிரதேசச் செயலகத்தின் நிலம். அகற்றினார்களா அரசினர்? பிரதேச சபை உரிமம் அற்ற கட்டடம். அகற்றினார்களா உள்ளூராட்சியினர்? மன்னார் - முசலி நெடுஞ்சாலை ஓரக் கட்டடம். அகற்றினரா நெடுஞ்சாலையினர்? வழக்காவது தொடுத்தார்களா?


சைவக் குடும்பங்களும் செறிந்த சிலாவத்துறையில் நிகழ்ந்த இந்த அத்துமீறலை, அடாவடித்தனத்தை அட்டூழியத்தை அகற்ற முதுகெலும்பில்லாத அரச எந்திரம், நாகர்களான சைவர்களின் பல்லாயிரமாண்டுப் பண்ணைப் பராம்பரியத் திருவுருவத்தை அகற்ற நீதிமன்றத்தை நாடுவராம்.


பரந்தன் ஏ9 நெடுஞ்சாலை ஓரம். நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் தலைமை தாங்கிய மெதடிசுத்த தேவாலயம். முன்னே அரசு நிலத்தில், பிரதேசச் செயலக உரிமமின்றி, பிரதேச சபை உரிமம் இன்றி நெடுஞ்சாலைக் காணியில் ஒன்பது அடி உயரச் சிலுவை.


கண்ணுள் குற்றவில்லையா? கண்கள் பிடரியிலா? சைவக் குடும்பங்களும் செறிந்த பரந்தனில் நிகழ்ந்த இந்த அத்துமீறலை, அடாவடித்தனத்தை அட்டூழியத்தை அகற்ற முதுகெலும்பில்லாத அரச எந்திரம், நாகர்களான சைவர்களின் பல்லாயிரமாண்டுப் பண்ணைப் பராம்பரியத் திருவுருவத்தை அகற்ற நீதிமன்றத்தை நாடுவராம்.


மட்டக்களப்பு அருகே ஒட்டமாவடி. பல்லாயிரமாண்டு வரலாற்றுக் கொற்றவைக் கோயில். தமிழரின் ஐவகை நிலத்துள் பாலை நிலத் தெய்வப் பெருமாட்டி. அருள்மிகு காளியாத்தாள் திருக்கோயில். அமைச்சர் பதவியைப் பயன்படுத்தினேன். தொல்லியல் சின்னத்தை அகற்றினேன். அருள்மிகு காளியாத்தாள் கோயிலை இடித்தேன், அழித்தேன். அந்த நிலத்தை மசூதிக்கு வழங்கினேன். அங்கே மசூதியார் கட்டடம் அமைத்தனர். சொன்னவர் மதவெறிப் புல்லர் இசுபுல்லர்.


சைவக் குடும்பங்களும் செறிந்த ஒட்டமாவடியில் நிகழ்ந்த இந்த அத்துமீறலை, அடாவடித்தனத்தை அட்டூழியத்தை அகற்ற முதுகெலும்பில்லாத அரச எந்திரம், நாகர்களான சைவர்களின் பல்லாயிரமாண்டுப் பண்ணைப் பராம்பரீயத் திருவுருவத்தை அகற்ற நீதிமன்றத்தை நாடுவராம்.


நான் பட்டியலிட்டவை அண்மைய 30 ஆண்டுப் போருக்குப் பிந்தைய நிகழ்வுகள். இவை எடுத்துக் காட்டுகள். இவை ஒத்த எண்ணிக்கையுள் அடங்கா அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள். அட்டூழியங்கள்.


இவை யாவும் சைவ மரபை அகற்றும் அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள். அட்டூழியங்கள். புத்தர், கிறித்தவர், முகமதியர் யாவரும் சைவ மரபுகளை அழிக்கக் குறிவைக்கின்றனர். பண்டைய நாக வம்சத்தை அழிப்போம். இயக்க வம்சத்தை அழிப்போம். அவர்களின் தோன்றலர் காலங்களுக்கூடாகச் செதுக்கிச் செதுக்கிக் கூர்மையாக்கும் பண்பாட்டு வழமைகளை அழிப்போம். நம்பிக்கை மரபுகளைச் சிதைப்போம். வாழ்வியல் கூறுகளை உடைத்தெறிவோம்.


வட மாகாண சபையின் உள்ளூராட்சியர், நடுவண் அரசின் நெடுஞ்சாலை ஆட்சிச் சபையார், பொலிஸா மூவரும் இணைகின்றனராம். நீதி மன்றத்தை நாடுவராம். பண்ணையில் அருள்மிகு நாக பூசணி அம்மன் திரு உருவச் சிலையை அகற்றுவராம். சைவர்கள் வாழாவிருப்பர் எனக் கனவு காண்கின்றனர். அற வழியை வாழ்வாகக் கொண்ட, அறவாழி அந்தணர்களைச் சீண்டுகின்றனர்.


என்ன துணிச்சல் ஆட்சியாளருக்கு? அகற்றுவார்களாம். வரலாற்றை அழிப்பார்களாம். நாக மரபை நம்பிக்கை ஒளியை அருள் பெருக்கத்தை அழிப்பார்களாம். சைவர்களாகிய நாங்கள் சவாலை ஏற்போம். சந்திப்போம். நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம். பணிவோம் அல்லோம். இடுக்கட்பட்டிருப்பினும் இரந்து யாரையும் விடுக்கட் பிரான் என வினவுவோம் அல்லோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.