Header Ads



'ஜனாதிபதி விருது' பெற்றார் ஹுஸ்னா (படங்கள்)


சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பில் பெரும் பங்களிப்பை வழங்கிய தமிழ் சிங்கள, ஆங்கில மொழி அச்சு, இலத்திரனியல்  ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள், அமைப்புக்களுக்கான  சுற்றுச்சூழல்-2021/2022 க்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் தமிழ் மொழிமூல  ஊடகத்துக்கான ஜனாதிபதி விருதை தினக்குரல் பெற்றுக்கொண்டுள்ளது.


  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப லோட்டஸ் ஹோலில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது - 2021/2022 வழங்கும் நிகழ்விலேயே  தமிழ் மொழி மூல  ஊடகத்துக்கான  இந்த விருதை தினக்குரல் உதவி ஆசிரியர் எச்.ஹுஸ்னா சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.


தினக்குரல் உதவி ஆசிரியர் எச்.ஹுஸ்னா ஏற்கனவே இலங்கை பத்திரிகைப் பேரவையும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து வருடந்தோறும் வழங்கும் சிறந்த  ஊடகவியலாளர்களுக்கான துறைசார் விருதுகளை 9 தடவைகளும் இலங்கை மருத்துவ சங்கத்தின் விருதுகளை 3 தடவைகளும் 2018 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி  ஊடக சிறப்பு விருதை ஒரு தடவையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிறந்த பெண்  ஊடகவியலாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்.


கொழும்பு 12,இஹ்ஸானியா அரபுக்கல்லூரியின் முன்னாள் அதிபரான மர்ஹூம் எம்.இஸட் .எம்.ஹுஸைன் -ஜெனீஹா தம்பதியின் மகளான இவர் ஆசிரியர் ஜெம்ஸித் அஸீஸின் மனைவியுமாவார்.




No comments

Powered by Blogger.