நாங்கள் உம்மாவுடன் இருக்கிறோமா..? உம்மா எங்களுடன் இருக்கிறவா..??
90 வயதைக் கடந்த ஒரு ஸாலிஹான தாயின் மகன் சொல்லுகிறார், நான் வீட்டில் தாயாரின் அருகில் அமர்ந்திருந்தேன். அந்நேரம் அங்கே வந்த நண்பர் ஒருவர் 'மாஷா அல்லாஹ்' அம்மா உங்களுடன் (உங்கள் வீட்டில்) இருக்கிறாரே! என்றார்.
நான் மரியாதை கருதி சொன்னேன் 'இல்லை நான்தான் அம்மாவுடன் இருக்கிறேன்'என்று.
அப்பொழுது என் அம்மா சொன்னார்: "மகனே! அவ்வாறு சொல்லாதே, சிறு வயதில் நீ என்னிடம் இருந்தாய் நாங்கள் முதிய வயதை அடைந்து விட்ட பின் நாங்கள் உன்னிடம் இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு இந்த குர்ஆன் வசனத்தை படிக்கவில்லையா?
"உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்தபோது"(அல்குர்ஆன் 17:23) என்ற வசனத்தை ஓதி காட்டினார்.
அந்நேரம் எனக்கு இப்பொழுதுதான் அந்த வசனத்தைக் கேட்பது போல் தோன்றியது"
சகோதரர்களே! பெற்றோருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, எலும்பு உடல் சக்தி என அனைத்தும் வலுவிழந்து விடுகிறது. தாய் தந்தைக்கு நம்மேல் உள்ள பாசத்தைத் தவிர, அந்த பாசமும் பரிவும் வயதாக ஆக அதிகரித்துக் கொண்டே போகும் அந்த அன்பையும் பாசத்தையும் உங்களுக்கான உணர்ச்சிகளால் நீங்கள் நீர்த்துப் போகச் செய்து விடாதீர்.
உங்கள் கீழ்ப்படியாமையால் உங்கள் பெற்றோர்களைச் சோர்வடையச் செய்யாதீர், ஏனென்றால் அல்லாஹ் வின் மீது ஆணையாக தாயின் கன்னத்திலோ அல்லது பெருமூச்சு விடும் தந்தையின் நரைத்த தாடியிலோ ஒரு சொட்டுக் கண்ணீர் வழிகிறது என்றால், அது உங்கள் வாழ்க்கையை இருள் மயமாக்கப் போதுமானது!
அதிகமாக இந்தப் பிரார்த்தனையைக் கேளுங்கள்:
இறைவா, என்னையும் என் பெற்றோரையும் மன்னிப்பாயாக,,
இந்தப் பிரார்த்தனை 3 வழிபாடுகளை ஒருங்கிணைக்கிறது.
#பிரார்த்தனை செய்வதால் ஏற்படும் நன்மை,
#பெற்றோருக்குக் காட்டும் நன்றி,
#பாவமன்னிப்புத் தேடுதல்
சகோதரர்களே, உங்கள் பெற்றோரைப் பராமரிப்பது என்பது உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்கும் இடையே முறை வைத்து செய்யும் வேலை அல்ல. ஒரு மாதம் நீ பார்த்துக் கொள் ஒரு மாதம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு.
பெற்றோரைப் பேணுவது கூட்ட நெரிசலில் சொர்க்க வாசலுக்குள் இலகுவாக செல்லும் வழியாகும், இது சிலர் கவனிக்காத உண்மை. எந்த அளவு தாய், தந்தையருக்குச் செலவு செய்கிறீர்களோ அந்த அளவு உங்களது வாழ்வாதாரங்கள் மேம்படும்.
அகிலத்தார்களுக்கு அருட் கொடையாக வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: 'உங்களிடையேயுள்ள பலவீனர்களின் பொருட்டால் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகிறது''(புகாரி2896)
உங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள், வெற்றிகரமாக நடைபெற அவர்களின் துஆவைப் பெறுங்கள்.
ஹதீஸில் வருகிறது:
மூன்று துஆக்கள சந்தேகமில்லாமல் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும்
1அநீதி இழைக்கப் பட்டவனின் துஆ
2.(நல்ல நோக்கத்தோடு) பிரயாணம் செய்பவரின் துஆ
3. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் துஆ (திர்மதி1905)
கருணையாளனான அல்லாஹ், நம்மையுடைய நம் பெற்றோர்களுடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து சொர்க்கத்தில் நம்மை ஒன்றிணைப்பானாக
முஹம்மதுஇஸ்மாயீல்நாஜீபாஜில்மன்பயி
Post a Comment