Header Ads



55 வயது பெண்ணுக்கு SMS அனுப்பிய 21 வயது இளைஞர் படுகாயம் - 2 யுவதிகள் உள்ளிட்ட 4 பேர் கைது


இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று, தாக்கி காயப்படுத்திய இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்கேநபர்கள், மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


மாகொல ஞான மௌலி மாவத்தையை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கு ஹங்குரன்கெத்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் சமூக வலைத்தளத்தில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.


இது குறித்து உறவினர்களிடம் அப்பெண் தெரியப்படுத்தியதையடுத்து, அவரின் மருமகன் மற்றுமொரு யுவதியின் போலியான நிழற்படத்தை பயன்படுத்தி, WhatsApp கணக்கை உருவாக்கி குறித்த இளைஞருடன் குறுஞ்செய்திகளை பரிமாறி கொழும்பிற்கு அழைத்து வந்துள்ளார்.


அந்த இளைஞர் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு – புறக்கோட்டைக்கு வருகை தந்த போது, அப்பெண் அவரது மகள், மருமகன் மற்றுமொரு நபருடன் இணைந்து இளைஞரை காரில் கடத்தி, சப்புகஸ்கந்தைக்கு அழைத்துச்சென்று தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.


சப்புகஸ்கந்த – பமுனுவில மயானத்திற்கு அருகில் அவர்கள் இளைஞரைத் தாக்கி வீதியில் விட்டுச்சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் அவசரப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அங்கு சென்ற பொலிஸார் குறித்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments

Powered by Blogger.