Header Ads



கஃபாவை போன்ற இன்னொன்றை, நிர்மாணிக்கிறாரா இளவரசர் சல்மான்..?

 

- லத்தீப் பாரூக் -


இஸ்லாத்தின் புனித பூமியான சவூதி அரேபியா ‘பித்னா’ (குழப்பங்கள்) ‘தஜ்ஜால்’ (உலக அழிவின் அடையாளங்களில் ஒன்றாக வெளிப்படவுள்ள ஒரு குழப்பவாதி என சொல்லப்படும் நபர்) என்பனவற்றுக்கும் உரிய ஒரு பூமி என்றும் வர்ணிக்கப்படுகின்றது. சவூதி அரேபியாவில் உள்ள உலக முஸ்லிம்களின் புனித இறை இல்லமான கஃபாவை போலவே அதன் வடிவிலான ஒரு கட்டிடம் தற்போது தலைநகர் றியாத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.


இந்த விடயம் முஸ்லிம் உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த பிரம்மாண்டமான புதிய கஃபாவின் நிர்மாணம் பற்றி சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அண்மையில் அறிவித்திருந்தார். தலைநகர் றியாத்தின் மத்திய புள்ளியில் இந்த புதிய கஃபா நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

 

ஒரு நூதனசாலை, தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், பல்வேறு தேவைகளுக்கான அரங்கம், ஒரு மூழ்கும் தியேட்டர், இன்னும் 80க்கும் மேற்பட்ட களியாட்ட இடங்கள் என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த கட்டிட நிர்மாணத் திட்டம் அமையவுள்ளது. 400 மீட்டர் நீளத்துடன் பரவலான ஆழ அகலங்களைக் கொண்டதாக இந்தக் கட்டிடம் விரிவான ஒன்றாக அமையவுள்ளது. ஆளும் சவூதி வர்க்கத்தின் பரம்பரை தாயகமான மத்திய அரேபிய பிரதேசமான நஜத்தின் கட்டிடக் கலை வடிவமைப்iபால் ஈர்க்கப்பட்ட ஒரு வடிவமாக இது அமையவுள்ளது.


சவூதியில் உள்ள புனித இறை இல்லமான கஃபா உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமானதோர் இறை இல்லமாகும். இங்கு மேற்கொள்ளப்படும் புனித ஹஜ் மற்றும் உம்றா பயணங்களுக்காக உலகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இங்கு வருகை தருகின்றனர். புனித மக்கா நகரின் மத்திய புள்ளியில் அமைந்துள்ள மக்காவை நோக்கியதாகத் தான் உலக முஸ்லிம்களின் தினசரி தொழுகைகள் இடம்பெறுகின்றன. இங்கு விஜயம் செய்பவர்கள் கஃபாவை சுற்றி வந்து வழிபாடுகளில் ஈடுபடுவதும் வழக்கமாகும்.


ஏனைய சமயங்களின் சமய ரீதியான கட்டிடங்களைப் போலன்றி, கஃபா கனவடிவ அமைப்பு கொண்டதாகும். அது 15 மீட்டர் உயரமானது. ஓவ்வொரு பக்கமும் பத்தரை மீட்டர் கொண்டது. அதன் மூலைகள் இணைப்பை கொண்டவை. இன்றைய கஃபாவின் கதவுகள் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்டவை. இது 1982ல் இணைக்கப்பட்டது. கஃபாவை போர்த்தி இருக்கும் கிஷ்;வா எனப்படும் மிகப் பிரம்மாண்டமான துணி ஒரு காலத்தில் எகிப்தில் இருந்து ஹஜ்ஜுக்கு வரும் பயணிகள் கூட்டத்தோடு கொண்டு வரப்பட்டது. இன்று அது சவூதி அரேபியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. நவீன போக்குவரத்து வசதிகள் கண்டு பிடிக்கப்படும் வரை ஹஜ் பயணிகள் மக்காவை நோக்கி ஆபத்தான ஒரு பயணத்தையே மேற்கொண்டு வந்தனர். பெரும் கூட்டமாக பாலைவனங்கள் ஊடாக கய்ரோ, டமஸ்கஸ், யெமன், ஈராக் என பல இடங்களைக் கடந்து அந்தப் பயணம் மேற்ககொள்ளப்பட்டது.


கஃபா மற்றும் அதனோடு இணைந்த பள்ளி என்பனவற்றில் மேற்கொள்ளப்பட்ட கணிசமான மாற்றங்கள் புனிதமான கட்டிடங்கள் உட்பட ஏனைய கட்டிடங்களும் அவ்வப்போது மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதை நினைவூட்டுகின்றது.

 

கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள மக்கா நகரில் உள்ள இவ்வுலக முஸ்லிம்களின்; முதலாவது புனித வணக்கஸ்தலம் ஆகும். இது வியக்கவைக்கும் கட்டிடக் கலையோடு ஆடம்பரமும் அலங்காரமும் மிக்க தங்கத்தாலும், வெள்ளியாலும் நெய்யப்பட்ட இஸ்லாமிய எழுத்தனிக்கலையோடு உருவாக்கப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்டுள்ள இறை இல்லம் ஆகும்.


சில கட்டிடங்களில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாகவும், பொதுவான சமூகத் தேவைகளுக்கு ஏற்பவும் இந்தக் கட்டிங்களில் மாற்றங்களும் அவசியமாகின. புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு முஸ்லிம்கள் மட்டுமே விஜயம் செய்ய முடியும்.


முஹம்மத் பின் சல்மானின் புதிய கஃபாவை சுட்டிக் காட்டி சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் ஏற்கனவே கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கி உள்ளனர். இவை வஹ்ஹாபி இஸ்லாத்தின் கடும் போக்கை விட உலக பொருளாதாரத்தின் கடுமையான நிலையை ஆதரிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.


கல்விமான் முஹம்மத் அல் ஹாச்சிமி அல் ஹாமிதி தெரிவித்துள்ள கருத்தில் “முஹம்மத் பின் சல்மான் றியாத்தில் தனது சொந்த கஃபாவையா நிர்மாணிக்கின்றாரா? அவர் தனது பதிய திட்டத்துக்காக அந்த வடிவத்தை தெரிவு செய்துள்ளார். இது பொழுது போக்கிற்கான புதிய கஃபாவாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர் சாத்தானின் கொம்பு வெளிப்படும் இடமாக சவூதியின் நஜ்த் பிரதேசம் அமையும் என்ற நபி மொழியையும் நினைவூட்டி உள்ளார்.

 

இன்னொரு கல்விமானான அஸாத் அபு கலீல் தனது டுவிட்டர் பதிவில் முடிக்குரிய இளவரசர் தனது கஃபாவை நிர்மாணிப்பது போல் தெரிகின்றது. அதை அவர் இறை வணக்கத்துக்கான புதிய கஃபாவாகவும் அமுல் படுத்துவாரா என்பதே கேள்வியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.


முர்தஸா ஹ{ஸேன் என்ற இன்டர்செப்ட் செய்தியாளர் “முதவாளித்துவத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கஃபாவை நிர்மாணிப்பது கொஞ்சம் அதிகமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தை பூகோள இடர் மற்றும் புலனாய்வு மற்றும் சர்வதேச நலன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முஹம்மத் அல் ஹாச்சிமி அல் ஹாமிதியும் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு விடியோ பதிவில் “குறியீட்டுவாதம் வியக்க வைக்கின்றது. சவூதி அரேபிய இராச்சியம் அதன் தனித்துவ அடையாளத்தை மிகவும் அத்தியாவசியமாக இடம் மாற்றுவது போல் தெரிகின்றது. மக்காவிலுள்ள கஃபாவை றியாத்துக்கு, இஸ்லாத்துக்குரிய கஃபாவை 2030 தூரநோக்கு திட்டத்துக்கு மாற்றுவது போல் இது அமைகின்றது என்று கூறியுள்ளார்.


கஃபா என்பது அரபியில் கனவடிவத்தை குறிக்கின்றது. இந்த கட்டிடம் அற்புதமான பட்டு அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான போர்லையால் போர்த்தப்பட்டது. சவூதி அரேபியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான மக்காவில் இது அமைந்துள்ளது. இஸ்லாத்தில் மிகவும் புனிதம் மிக்க வழிபாட்டு இடமும் இதுவேயாகும்.


இஸ்லாமிய கட்டளைகளின் படி முஸ்லிம்கள் தினசரி ஐவேளை இறைவனைத் தொழ வேண்டும். பொது வருடக் கணக்கில் 624ம் அண்டில் இருந்து இந்த கஃபா அமைந்துள்ள திசையை நோக்கியே முஸ்லிம்கள் தொழுது வருகின்றனர். அதற்கு முன் அவர்கள் ஜெரூஸலம் அமைந்துள்ள திசையை நோக்கி தொழுதனர். உலகம் முழுவதும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் கிப்லா என்ற அரபுச் சொல்லில் தொழும் திசை அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.


முஸ்லிம்கள் அனைவரும் தமது வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். அந்தப் புனிதப் பயணத்துக்கான இடமும் மக்காவேயாகும். ஹஜ் கடமை மற்றும் அன்றாட ஐவேளை தொழுகை என்பன இஸ்லாமிய நம்பிக்கையின் ஐந்து பிரதான தூண்களில் இரண்டாகும்.


மக்காவை வந்தடையும் முஸ்லிம் யாத்திரிகர்கள் கஃபாவை சுற்றி அமையப் பெற்றுள்ள மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் ஒன்று கூடுவர். புpன்னர் அவர்கள் அங்கு கடமையாக்கப்பட்டுள்ள மற்றும் பாரம்பரியமான வழிபாடுகளில் ஈடுபடுவர்.


புதிய திட்டங்கள் எதிர்கால ஸ்மார்ட் சிற்றி (ஸ்மார்ட் நகரம்) என்ற கருப் பொருளின் கீழ் நியோம் என்ற நகரத் திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டுள்ளன. 500 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமுல் செய்யப்படவுள்ள இந்த அபிவிருத்தித் திட்டங்கள் 170 கிலோமீட்டர் நீளமான மெகா நகரத் திட்டத்தையும் உள்ளடக்கியது. இந்த ஆடம்பர செலவுத் திட்டம் இப்போது சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது. சுற்றாடலில் அது ஏற்படுத்தவுள்ள தாக்கம் பிரதான சர்ச்சைக்குரிய விடயமாகப் பேசப்படுகின்றது. அதன் சாத்தியவளம் மற்றும் அங்கு மீறப்படவுள்ள மனித உரிமைகள் என்பன பற்றியும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. குறிப்பாக இந்தத் திட்டம் காரணமாக அந்தப் பிரதேசத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


சவூதி அரேபியாவின் அதிகாரமும் அதன் பூகோள செல்வாக்கும் ஒரு தனி மனிதனில் விரயமாக்கப்படுகின்றன என்ற தலைப்பில் பிரிட்டிஷ் பத்தி எழுத்தாளர் யுவொன் றிட்லி எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.


உலகில் பல்வேறு நல்ல விடயங்களைச் செய்யக் கூடிய நிலையில் பின் சல்மான் உள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு கௌரவம், அமைதி, நியாயம் என்பனவற்றுடன் கூடிய தீர்வை பெற்றுக் கொடுத்தல், மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் கொடுங்கோல் ஆட்சியாளர்களிடம் சிக்கித் தவிக்கும் சாதாரண அப்பாவி மக்களுக்கான நியாயத்தை நிலை நிறுத்தல்;, இந்தியாவிலும் சீனாவிலும் அவரின் சகோதர முஸ்லிம்கள் அனுபவித்து வரும் இன்னல்களுக்கு முடிவு காணல் என எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் சவூதி அரேபியாவின் வல்லமை மற்றும் சர்வதேச செல்வாக்கு என்பனவற்றை அவர் தன்னில் வீணடித்துக் கொண்டு இருக்கின்றார். அந்த வகையில் அவர் தனது அதிகாரம், பதவி என்பனவற்றை வீணடிக்கும் ஒரு நபராகவே இருக்கின்றார்.


சவூதி அரேபியா யுத்தங்களில் சண்டை இட்டதில்லை. ஆனால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பிய கூட்டணி மேற்கொண்ட எல்லா தாக்குதல்களிலும் அது பங்கேற்றுள்ளது. ஆயுதங்களை கொள்வனவு செய்ய கோடிக்கணக்கான டொலர்களை அது செலவிடுகின்றது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் 100 கோடி டொலர் பெருமதியான ஆயுத கொள்வனவு உடன்படிக்கையில் சல்மான் ஒப்பமிட்டுள்ளார். பாகிஸ்தானில் அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 33 மில்லியன் மக்களைப் பற்றி அவர் இப்போதாவது கொஞ்சம் எண்ணிப்பார்க்கக் கூடாதா? ஆப்கானிஸ்தானில் பஞசத்தால் பாதிக்கப்பட்டு உணவுக்காக தமது எடல் உறுப்புக்களைக் கூட விற்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களைப் பற்றி அவர் கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா? துருக்கியிலும் சிரியாவிலும் பூகம்ப அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு உணவுக்காகவும் உறைவிடத்துக்காகவும் கடும் குளிரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அவர் கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?


No comments

Powered by Blogger.