Header Ads



பிரபாகரனின் மகள் லண்டனில் எனக்கூறி, சுவிட்ஸர்லாந்தில் நடத்தப்பட்ட நாடகம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் வெளியிட்ட தகவல், நிதி சேகரிப்புக்கான ஓர் அறிவிப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார்.


யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போது, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.


இந்த நிதி சேகரிக்கும் நடவடிக்கைக்கான கூட்டம் சுவிட்ஸர்லாந்து நாட்டிலேயே முதன் முதலில் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.


பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் இருப்பதாகவும், அவருடைய வாழ்வாதாரத்துக்காக நிதி சேகரிக்கப் போவதாகவும் - அந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சித்தார்த்தன் எம்பி தெரிவித்தார்.


அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுவிட்ஸர்லாந்திலுள்ள ஒருவர், பிரபாகரனின் மகளைப் பார்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும், அந்த நபரின் மகளும் பிரபாகரனின் மகளும் ஒன்றாகப் படித்தவர்கள் எனவும் சித்தார்த்தன் கூறினார்.


இதனையடுத்து அந்த நபர் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு பிரபாகரனின் மகள் என ஒரு பெண் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது குறிப்பிட்டார்.


இலங்கை இறுதிப் போரில் காணாமல் போனவர்கள் எங்கே? ராணுவம் பதிலளிக்க வவுனியா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழு விவரம்


அந்தப் பெண்ணிடம் சுவிட்ஸர்லாந்திலிருந்து சென்றவர், 'உங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு கற்றுத் தந்தவர் யார்' என கேட்டுள்ளார்.


”பிரபாகரனின் மகளுக்கு யார் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார் என்று சுவிட்ஸர்லாந்திலிருந்து சென்ற நபருக்குத் தெரியும். புலிகளின் பெண்கள் படையொன்றிலுள்ள ஒருவர்தான் பிரபாகரனின் மகளுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்”.


”அந்தக் கேள்விக்கு பிரபாகரனின் மகள் எனக்கூறப்பட்ட பெண், தவறான ஒரு பதிலை வழங்கியுள்ளார். இதனையடுத்து அந்த நபர், இந்த விடயத்தை உடனடியாக சுவிட்ஸர்லாந்தில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தி, அங்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையை முறியடித்தார்". எனவும் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.


யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக


No comments

Powered by Blogger.