Header Ads



நாடு வங்குரோத்தாகி ரூபாவும் இல்லை, டொலர்களும் இல்லை - தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சி


பாராளுமன்றம் உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்கள்  இன்று (07)ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.


இன்று நாடு முழுவதும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலால் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது.


வாக்களிக்கும் உரிமை என்பது அடிப்படை உரிமையாகும்.வாக்களிப்பை தாமதப்படுத்துவது என்பது அந்த அடிப்படை உரிமையை இழப்பதாகவே அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பதை நீதித்துறையே தீர்மானிக்க வேண்டும் என அரசாங்க தரப்பின் அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.நமது நாட்டின் நீதித்துறையின் வரலாற்றைப் பார்த்தால், நீதித்துறை எப்போதும் தேரதலை நடத்துவதற்கே முன்நின்றுள்ளது. நீதிமன்றத்தின் ஊடாக இந்தத் தேர்தலை ஒத்திவைக்க முடியும் என யாராவது நினைத்தால் அது ஓர் மாயை மாத்திரமே. எங்களுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.


தேர்தலை நடத்துவதற்கு எவரேனும் பிரச்சினைகளை உருவாக்கினால் அவர்கள் அரசியலமைப்பை மீறுவதற்கு சமம்.


நிதி இல்லை,தேர்தல் நடத்த இது நேரமில்லை என்று பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.ஆனால் அரசியலமைப்பின் படி குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.எங்களிடம் பணம் இல்லை என்று மத்திய வங்கியும் நிதி அமைச்சும் கூறுகின்றன.அவர்கள் செய்வது இந்நாட்டின் அரசியலமைப்பை மீறும் செயல் என்று அவர்களுக்கு நான் கூறுகிறேன். ஏனெனில் அரசியலமைப்பின் பிரகாரம் மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் அரசாங்கம் பணத்தை வழங்க மறுக்க முடியாது. நாங்கள் மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் இதற்கும் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.


நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் அரசாங்கம் நீதிமன்றம் மூலம் தாமதப்படுத்த முயற்சிக்கிறது. எமது அரசியலமைப்பைப் பாதுகாக்கவே நீதிமன்றம் உள்ளது. வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு அடிப்படை உரிமையாகும். நீதிமன்றங்கள் எப்போதும் தேர்தலுக்கே சார்பாக இருந்துள்ளன.


தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முதலில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வேட்புமனுக்கள் கோரப்பட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு,தபால் வாக்களிப்பு தினமும் நிர்னயிக்கப்பட்டு சகல ஏற்பாடுகளும் நடந்துள்ளன.தேர்தலை நடத்துவதே எஞ்சியுள்ள விடயமாகும்.


பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஏழு மாதங்களுக்குள் இரண்டு முறை நிறைவு செய்துள்ளனர். சமீபகால வரலாற்றில் இப்படியொரு கூட்டத்தொடர் கைவிடப்படவில்லை. இருந்ததில்லை.


பாராளுமன்றம் பலப்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் பாராளுமன்றம் முற்றாக வலுவிழந்து அனைத்து தெரிவுக்குழுக்களும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிவடைந்ததால் முன் நடந்த விசாரணைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.


கடந்த இரண்டு மூன்று நாட்களாக அரச சார்பு பத்திரிகைகளில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருப்பதை பார்த்தேன்.


ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையின் மூலம் சில கருத்தோட்டங்களை உருவாக்கி தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையில் அரசாங்கம் உள்ளதாக அதில் பிரசுரிக்கப்படுள்ளன. இந்த கொள்கைப் பிரகடன உரை அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்ட ஒழுங்குகள் குறித்தது சார்ந்ததே என்று நான் அவர்களுக்குச் சொல்கிறேன்.கொள்கைப் பிரகடன உரை ஓர் சட்டமல்ல,உள்ளூராட்சி சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தும் சட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கொள்கைப் பிரகடன உரைக்குப் பிறகு நீதிமன்றம் பயந்து தேர்தலை ஒத்திவைக்க சார்பாக தீர்ப்புச் சொல்லும் அல்லது முயல்கிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். சுத்த சிங்களத்தில் சொன்னால் அவ்வாறு செய்ய முடியாது.கொள்கைப் பிரகடன உரை ஒரு சட்டம் அல்ல என்று நான் கூற விரும்புகிறேன்,நாட்டின் சட்டத்தின்படி நமது நீதித்துறை தேர்தலை நடத்தும் என்று நான் நம்புகிறேன்.


நாடாளுமன்றத்தில் பேசும் பேச்சு சிறப்புரிமைகளுக்குட்பட்டது. வெளியில் இருந்து பேசினால் நீதிமன்றத்தை அவமதிப்பதான வாய்ப்பும் உள்ளது. சுதந்திர தின உரையில், பொருளாதாரம் கஷ்டமாக உள்ளது, பணமில்லை, தேர்தலை ஒத்தி  வைத்தால் நல்லது என்பன நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும். எவ்வாறாயினும், பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்துவதற்கு சிறப்புரிமைகள் இருப்பதால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.


யார் என்ன சொன்னாலும்,தேர்தலை ஒத்திவைக்கும் முடிவை நீதிமன்றத்தின் மூலம் எடுக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.


சிலர் பணமில்லாததால் தேர்தலை ஒத்திவைக்க நினைக்கிறார்கள்,உண்மையில் அவர்களுக்கு வாக்குகள் இல்லை. அதுதான் உண்மையான கதை.இந்த தேர்தலை பிற்போட்டால் சர்வதேச உதவிகள் தாமதமாகும்.சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு முதலில் வந்த போது அரசாங்கத்திற்கு புதிய மக்கள் ஆணை கிடைக்க வேண்டும் என்று கூறியது.


இந்நாட்டிற்கு புதிய அரசாங்கம் தேவை.புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச உதவி கிடைக்கும்.பங்களாதேச நாடு இரண்டு மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து உதவி பெற்றது. நாங்கள் ஏழு மாதங்களாகிவிட்டோம்.சர்வதேச நாணய நிதியம் ஏன் பலவாறு தாமதப்படுத்துகிறது?  அரசாங்கத்திற்கு நிதி வழங்க பயப்படுகிறார்கள்.


இப்போது நாடு வங்குரோத்தாகி விட்டது,ரூபாவும் இல்லை,டொலர்களும் இல்லை.இந்த அரசாங்கம் நாட்டை மீட்க எந்த உதவியும் பெறவில்லை,சர்வதேச சமூகத்திடம் பணம் கொடுக்க பயப்படுகிறது.நாங்கள் அரசை ஒப்படைத்த போது ஏழாயிரத்து எண்ணூறு அமெரிக்க டொலர்கள் கையிருப்பில் இருந்தன.அது 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவானது என்பது கடந்த வருடம்தான் தெரிந்தது.


நாடு வங்குரோத்தாகி விட்டது எனவே தான் மக்கள் மீது வரம்பற்ற வரிகளை சுமத்தி வருகிறது.இதற்கு அரசாங்கமே பொறுப்பு.  எனவே இந்த நாட்டுக்கு புதிய அரசாங்கம் தேவை அதுதான் சர்வதேசத்தின் நம்பிக்கை அப்போது தான் கிடைக்கும்.எனவே இந்த முக்கியமான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் நல்ல செய்தியை வழங்குவார்கள் என்பது உறுதி.இந்த அரசாங்கத்திற்கு ஆணை இல்லை என சர்வதேச சமூகம் கருதினால், உதவிகள் தாமதமாகும்.


இந்நாட்களில் பேசுபொருளாக இருக்கும் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.