Header Ads



தேர்தலை நடத்தாமல் ஆட்சியில் இருக்க ரணிலும், பொதுஜன பெரமுனவும் முயற்சி


 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று குறிப்பிடும் அதிகாரம் திறைச்சேரிக்கு கிடையாது எனவும் நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, அடுத்த வருடமே தேர்தல் நடத்தப்படுமென அதிபர் குறிப்பிட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் தெரிவித்தார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர், சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயார் இல்லை என்ற காரணத்தினால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை ரணில் விக்ரமசிங்க கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.


அடுத்த வருடம் தான் எந்தத் தேர்தலும் இடம்பெறும் என அதிபர் குறிப்பிட்டுள்ளமை வெறுக்கத்தக்கதாகும்.


2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்தார்கள்.


நாட்டு மக்களிடம் செல்வதற்கு தைரியம் இல்லாத காரணத்தினால் ரணில் விக்ரமசிங்க தேர்தலை பிற்போட அவதானம் செலுத்தியுள்ளார்.அடுத்த ஆண்டும் தேர்தல் இடம்பெறுமா என்பது சந்தேகத்திரியது.


பொருளாதார பாதிப்பு, தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட இடமளித்தால் எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தலும் நாட்டில் இடம்பெறாது.


தேர்தலை நடத்தாமல் ஆட்சியில் இருக்கவே அதிபரும்,பொதுஜன பெரமுன அரசாங்கமும் முயற்சிக்கிறது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிபரின் முயற்சிக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.


தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று குறிப்பிடும் அதிகாரம் திறைச்சேரிக்கு கிடையாது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாடதளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தேர்தல் செலவுகளுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு” - என்றார்.

No comments

Powered by Blogger.