Header Ads



யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸ் விடுத்துள்ள அறிவிப்பு


யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார்.

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய கும்பல் தொடர்பில் வெளியாகிய காணொளிகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண மேலும் தெரிவித்ததாவது;


மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அவர்களை அழைத்து வந்து அடித்துத் துன்புறுத்தும் கும்பல் தொடர்பில் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகின.


அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பொதுமக்களை சட்டத்துக்குப் புறம்பாக அடித்து துன்புறுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் பிரிவுகளுக்கு உத்தரவிட்டேன்.


அதனடிப்படையில் முதன்மை சந்தேக நபர் உள்பட ஐந்து பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் வரும் பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இது போன்று எதாவது ஒரு வகையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முறைப்பாடு வழங்குவதில் சிக்கல் இருந்தால் நேரடியாக வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு தகவல்களை வழங்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.


பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் தயாராக உள்ளேன் – என்றார்.

No comments

Powered by Blogger.