Header Ads



கூண்டில் ஏற மறுத்த மைத்திரிபால, நீதவானிடம் ஏச்சு வாங்கினார் - பைசர் முஸ்தபா ஆஜராகியும் பயனில்லை


ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை இன்று -27- இடம்பெற்ற வேளையில் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏற மறுத்ததை, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே கண்டித்துள்ளார் . 


இதனை அடுத்து அவர் பிரதிவாதி கூண்டில் ஏறியதாக நீதிமன்றத்துக்கான  நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார் . 


 ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் அருட்தந்தை சிரில் காமினி உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த கண்டிப்பு வெளியிடப்பட்டுள்ளது . 


இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏறாது , அதற்கு வெளியே நின்றதை அவதானித்த முறைப்பாட்டு தரப்பு சட்டத்தரணி ரியென்சி ஹர்சகுலரத்ன நீதிமன்றத்தின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்றார் . 


எனினும் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா . தமது கட்சிக்காரர் சார்பில் தொடரப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டுக்கமைய எதிர்கால செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளதென தெரிவித்தார் . 


எனவே அவர் சாட்சி கூண்டில் ஏற வேண்டிய அவசியமில்லை என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்,


இதனையடுத்து மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரதிவாதியான மைத்ரிபால சிறிசேன மீதான வழக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக முன்கொண்டு செல்வதில்லை என அறிவித்துள்ள போதும் , பிரதிவாதி , கூண்டில் ஏற வேண்டியதில்லை என எந்த இடத்திலும் கூறவில்லை என்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குறிப்பிட்டார் . 


இதனையடுத்து , முன்னாள் ஜனாதிபதி சாட்சிகூண்டில் ஏறியுள்ளார்,  இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் மார்ச் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது . 

No comments

Powered by Blogger.