Header Ads



பெற்றோர்களே, பிள்ளைகளே, உணர்வு பெறுவீர்கள்.


எமது நிலை என்ன? அல்லாஹ் போதுமானவன்

✍️✍️✍️✍️✍️✍️

சவூதியைச் சேர்ந்த பொறுமையின் சிகரமான அப்துல்லா Bபானிஃமா என்ற மிகப்பெரும் ஆளுமை இறையடி சேர்ந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 31 வருடங்கள் சக்கர நாற்காலியில் வாழ்வை கழித்தாலும் பொறுமையை கைவிடவில்லை.


தலையைத் தவிர கை, கால்கள் எதையும் அசைக்க  முடியாத நிலை இருந்தும் சோர்ந்து போகவில்லை. விதியை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தை ஆழமாகக் கற்றார். கற்றதை மக்களுக்கு போதித்து வந்த நிலையில் இறையடி சேர்ந்தார். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக.


தனக்கு பக்கவாதம் ஏற்பட்டது பற்றி அவர் கூறுவதைப் பாருங்கள்:


நான் ஆரோக்கியமாக இருந்த போது எனது தந்தையின் பேச்சை கேட்கவில்லை. பல தீய வேலைகள் செய்தேன். 


நான் சிகரெட் புகைத்தது, என் தந்தைக்கு எப்படியோ தெரிந்து விட்டது.


" நீ சிகரெட் புகைக்கின்றாயா" எனக் கேட்டார். "இல்லை" என்று பொய் சொன்னேன்.


அவருக்குக் கோபம் வந்து " நீ புகைத்தால் உன் கழுத்தை அல்லாஹ் உடைத்து விடட்டும் என்றார்.


நான் அவர் பேச்சை காதில் வாங்கவேயில்லை.


அடுத்த நாள் நண்பர்களுடன் நீச்சல் தடாகத்தில் உயரத்தில் இருந்து பாய்ந்து நீந்த முற்பட்ட போது தலை நிலத்தில் அடிபட்டு கழுத்து உடைந்து விட்டது. 


எத்தனையோ சத்திர சிகிச்சைகள்... எதுவும் பயனளிக்கவில்லை. 


👉 ஆரோக்கியம் ஒரு நிமிடத்தில் பறிபோகும்...

👉 பெற்றொருக்கு மரியாதை செய்யுங்கள்.

👉 பிள்ளைகளை திட்டாதீர்கள்...

அவர் தனது ஆசைகள் பற்றி கூறும்போது:


எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. ஆசைகள் என்பதைவிட கைசேதங்கள் என்று சொல்லலாம்.


1- ஆரோக்கியமாக இருந்த போது நான் தொழவில்லை;சுஜூது செய்யவில்லை. இப்போது ஆசையாக உள்ளது. ஆனால் என்னால் முடியவில்லை.


2- அல்குர்ஆனின் பக்கங்களைப் புரட்ட ஆசை. முடியவில்லை.


3- பெருநாள் போன்ற தினங்களில் வீட்டுக்குச் சென்று எனது தாயை ஆரத்தழுவ ஆசை. ஆனால் முடியவில்லை.


அவரது கண்கள் கலங்குகின்றன. துக்கத்தை அடக்கிக் கொள்கிறார்.


👉சகோதரர்களே!


இரு கைகள், இரு கால்களுடன் நடமாடி ஆரோக்கியமாக வாழும் நாம் இறைவனின் அருள்களின் பெறுமதியை உணர்ந்துள்ளோமா?


அதற்காக நன்றி கூறுகின்றோமா? அவனுக்கு சுஜூது செய்கின்றோமா?


ஆரோக்கியம் நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளோமா?


விழித்துக் கொள்வோம்...


இறைவனின் பக்கம் திரும்புவோம்.


சிறுசிறு துன்பங்களை விடுவோம்...


எம்மைவிட பல சோதனைகளால் பாதிக்கப்பட்டோர் எத்தனையோ பேர் உள்ளனர்.


அருள்களுக்காகவும்,  ஆரோக்கியத்திற்காகவும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவோம்.


- பாஹிர் சுபைர் -

No comments

Powered by Blogger.