Header Ads



தினேஷ் ஷாப்டர் மரணத்துக்கான, காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை - நீதவான்


பிரபல வரத்தகர் தினேஷ் ஷாப்டரின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்தே, மரணம் குறித்த நீதவான் விசாரணை தனது உத்தியோகபூர்வ அறையில் நடத்த தீர்மானித்ததாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய திறந்த நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (23) அறிவித்தார்.


மேலும் மரணத்துக்கான காரணம் இதுவரை நீதிமன்றத்தால் கண்டறியப்படவில்லை எனவும் நீதவான் அறிவித்தார்.


மரணம் தொடர்பான பல்வேறுபட்ட தகவல்கள் ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருவதால் சாட்சிய விசாரணையை தனிப்பட்ட முறையில் நடத்துமாறு உயிரிழந்தவரின் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாக மேலதிக நீதவான் சுட்டிக்காட்டினார்.


சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அறிவித்த நீதவான், அவர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டே சாட்சிய விசாரணையை தனது உத்தியோகபூர்வ அறையில் நடத்த தீர்மானித்தாக குறிப்பிட்டார்.


ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்த அரசாங்கத்தின் நிபுணர் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நீதவான் அறிவித்தார்.


இந்த மரண விசாரணையுடன் தொடர்பான சாட்சிய விசாரணை நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் நடத்தப்பட்டதுடன், ஷாப்டரின் சகோதரரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.