Header Ads



100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு மைத்திரிக்கு உத்தரவு - ஏனையவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவும் இணைப்பு


 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தி, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது.


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளதாக, கடந்த 5ஆம் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.


அதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர்கொண்ட நீதியரசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாயும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாயும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்த வேண்டுமென நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.


2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1 comment:

  1. இந்த பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களைத் தடுக்க முயற்சி எடுக்காத குற்றங்களுக்காக இந்த நட்டஈடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது நல்ல செய்தி. குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த குண்டுத்தாக்குதல்களைத் திட்டமிட்டு யார் செயல்படுத்தினார்கள், யார் அதற்கு முதலீடு செய்தார்கள், அந்த முழுத்திட்டத்தையும் தீட்டி அதன் பின்னணியில் இயக்கிவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள இந்த நாட்டு மக்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இந்த குண்டுத்தாக்குதல்களைத் திட்டமிடுவதில் முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை என இதனுடன் தொடர்புடை ய முக்கியமான பலர் கருத்துத் தெரிவித்தனர் .அப்படியானால் அந்த நாடகத்தை பின்னணியில் இருந்து இயக்கியர்கள் யார் என்பதை விசாரணைகள் தௌிவுபடுத்தவேண்டும். இது தான் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை.

    ReplyDelete

Powered by Blogger.