Header Ads



மறு அறிவித்தல் வரை, கடலுக்கு செல்ல வேண்டாம்


மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்காளவிரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள Mandous சூறாவளியினால் வடக்கு கடற்பிராந்தியங்களில்  காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


இதனால் குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், இடைக்கிடையே பலத்த மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலைகள் 2.5 முதல் 3.5 மீட்டர் வரை எழக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Mandous சூறாவளி இன்று காலை புயலாக மாறி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கரையை கடக்கக்கூடும் என   எதிர்வுகூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.