Header Ads



ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அருகே கொள்ளையர்கள் - அநுரகுமார எடுத்துரைப்பு


- பா.நிரோஸ் -


பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோருக்கு அருகிலும் அவர்களுக்குப் பின்பக்கமாகவும் கொள்ளையர்களே அமர்ந்துள்ளனர் என  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


வர்த்தகர்கள் தற்கொலை  செய்துகொள்ளும் நிலைமைக்கு வந்துள்ளனர். பதுளையில் சிறப்பாக வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுத்த வர்த்தகர் ஒருவர் நாட்டின் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளால் அவரது  சொத்துகளை வங்கியில் வைத்து கடனைப் பெற்றுகொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் தற்போது அவரது வீடு உள்ளிட்ட சொத்துகளை வங்கி ஏலத்தில் விடுவதற்கு தயாராகியுள்ளார் என்றார்.


இதுபோன்ற வர்த்தகர்கள் வங்கிகளை ஏமாற்றுபவர்களோ கொள்ளையர்களோ கிடையாது. ஜனாதிபதி, பிரதமரின் இரு பக்கங்களும், அவர்களுக்குப் பின்னாலும் கொள்ளையர்கள் அமர்ந்திருக்கிறார்கள். வங்கிக்கடனைப் பெற்று செலுத்த முடியாத நிலைக்கு வந்துள்ள பதுளை வர்த்தகர் போன்ற இன்னும் பலர் இவர்களைப் போன்ற கொள்ளையர்கள் அல்லர். உண்மையில் அவர்கள் நேர்மையானவர்கள் எனவும் தெரிவித்தார்.


எனவே, பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு சொத்துகளை வங்கிகள் உடமையாக்கிக் கொள்வது தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் இதன்போது அநுரகுமார எம்.பி கோரிக்கை விடுத்தார்.

No comments

Powered by Blogger.