Header Ads



கிழக்கில் சிங்களவர் 800 சதவீதத்தினால் உயர்வு, சம்பந்தன் என்ற காரின் டயர் கொஞ்சம் தேய்ந்துள்ளது, இயந்திரம் நன்றாக ஓடுகின்றது

 


- பாறுக் ஷிஹான் -


மருதமுனை ஜெஸீலின் கவிவரிகள் மற்றும் இசையமைப்பில் என் நிலவே  பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா சனிக்கிழமை(24)மாலை  மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.கலாநிதி சத்தார்  பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற  இந்த விழாவில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் கலந்து சிறப்பித்தார்.


இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின்   பீடாதிபதி பேராசிரியர்.கலாநிதி எம்.எம்.பாஸில்  ஐவா கெம்பஸ் தவிசாளர் டொக்டர் எம்.எச்.எம்.முனாசிக்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இவர்களுடன் விஷேட அதிதிகளாக வர்த்தகர்களான எம்.ஐ.ஏ.பரீட்இ சட்டத்தரணி எப்.எம்.அமீருள் அன்சார் மொளலானா அகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


மேலும் இந்திய சினிமாப் பாடலுக்கு நிகராக இலங்கை மருதமுனையில் இருந்து புது மெருகுடன் இப்பாடல் இறுவெட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் கருத்து தெரிவித்ததாவது 


இனங்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பிலான பாடல்களை இயற்றினால் பொருத்தமாக இருக்கும்.தற்போது போதைப்பொருள் எமது பிரதேசத்தில் பிரச்சினையாக வந்து கொண்டு இருக்கின்றது.பொருளாதார நெருக்கடியினால் அரசாங்கம் தான் இதன் பின்னணியில் இருப்பதாக எனது மனதில் சந்தேகமும் இருக்கின்றது.தமிழ் மொழியினால் கிறிஸ்தவர்கள் தமிழர்கள் இஸ்லாமியர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம்.வடக்கு கிழக்கில் கூட தமிழ் மொழியின் ஊடாக தான் எமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த கூடியதாக இருக்கின்றது.அந்த வகையில் தான் எமது பாடல்கள் கலாச்சாரங்களின் ஊடாக எமது பகுதிகளில் அரசியல் அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.


1948 ஆண்டில் இருந்து எமது இனங்களுக்கிடையிலான விகிதாசாரங்களை கௌரவ சம்பந்தன் ஐயா ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு புள்ளிவிபரவியல் ஒன்றினை வைத்திருக்கின்றார்.90 வயதிலும் இவ்வாறான ஆய்வுகளை சம்பந்தன் ஐயா மேற்கொள்கின்றார்.சம்பந்தன் ஐயாவினை பற்றி நான் சில இடங்களில் அவர் கார் மாதிரி என்று குறிப்பிட்டுள்ளேன்.


அந்த காரின் டயர் கொஞ்சம் தேய்ந்து உள்ளது.ஆனால் இயந்திரம் நன்றாக ஓடுகின்றது.அப்படி தான் அவர் தற்போது இவ்வாறான புள்ளிவிபரங்களை வைத்திருக்கின்றார். கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஏனைய மாகாணங்களை விட பெரும்பான்மை சமூகத்தினரின் 800 வீதத்தினால் அதிகரித்துள்ளது.அதிலும் அம்பாறை மாவட்டத்தில் தான் அதிகரித்து காணப்படுகின்றது.எனவே வடகிழக்கில் உள்ள நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.



No comments

Powered by Blogger.