Header Ads



1,70,000 டொலர்கள் சம்பளத்தில் எலி பிடிக்க ஆள் தேவை - 'சற்றே ரத்த வெறிகொண்டவராக இருக்க வேண்டும்'


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதிதாக ஓர் அதிகாரி நியமிக்கப்படவுள்ளது அந்நகரின் எலிகளுக்கு கெட்ட செய்தியாக உள்ளது. நியூயார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்சின் அலுவகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''எலிகளின் தாக்கத்தை தணிக்கும் இயக்குநர்'' பணிக்கு ஆள் தேவை என்று கூறப்பட்டுள்ளது. 'பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் நியூயார்க் நகரின் உண்மையான எதிரியான எலிக்கு எதிராக போராடும் அரசு ஊழியர் நியமிக்கப்பட உள்ளதாக பலரும் இதனைக் குறிப்பிடுகின்றனர். 


இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மிகுந்த உந்துதல் கொண்டவர்களாகவும் ''சற்றே ரத்த வெறிகொண்டவராக இருக்க வேண்டும்'' என்றும் இந்த வேலைவாய்ப்பு விளம்பர வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் ஆண்டுக்கு 1,70,000 அமெரிக்க டாலர் சம்பளம் பெறுவார். தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.1.38 கோடி ஆகும்.


இது தினமும் 24 மணி நேரமும் பணியாற்றுக்கூடிய வேலை. வேலைக்கு விண்ணப்பிப்பவர் சகிப்புத்தன்மை, நகர மக்களுடன் தொடர்பில் இருத்தல், உற்சாகம், தந்திரமான மனநிலை, துணிச்சல், சமூகத்தினரிடம் நேர்மறையான கண்ணோட்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. எலிகளைக் குறைக்கும் உத்திகளை உருவாக்குதல், அதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கை முன்முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியன இந்த புதிய ஊழியரின் பொறுப்புகளில் அடங்கும். 


“எலிகள் இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை வெறுக்கும். ஆனால், 88 லட்சம் நியூயார்க் நகர வாசிகள் மற்றும் நகர அரசாங்கம் ஆகியவை எலிகளின் எண்ணிக்கையை குறைத்தல், நகரில் தூய்மையை அதிகரித்தல், மற்றும் கொள்ளைநோய்கள் பரவலைத் தடுத்தல் ஆகிய பணிகளுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்றுவர்,” என பணியின் மதிப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எலிகளுக்கு எதிரான போர் எனும் இந்த அண்மைக் கால முன்னெடுப்பு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நகரில் நடமாடும் எலிகளைக் கட்டுப்படுத்துவதற்கான முந்தைய முயற்சிகள் கலவையான விளைவுகளையே கொண்டிருந்தன. இதற்கு முன்பு, தெரு முழுவதும் குப்பைத் தொட்டிகளை நிறுவுதல், நியூயார்க்வாசிகள் குப்பைகளை கொட்டும் இடத்தை மாற்றுதல் மற்றும் பூச்சிகளைத் தடுக்கும் வலுவான குப்பைப் பைகளுக்கு புதிய விதிகளை நிர்ணயித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


கடந்த சில ஆண்டுகளாக இந்நகரில் எலிகளின் எண்ணிக்கை அதிக அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது குறித்து நகரின் சேவை மையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 67 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நான்கு நியூயார்க்வாசிகளுக்கு ஓர் எலி என்ற விகிதத்தில் அங்கு எலிகள் உலவுகின்றன. நியூயார்க் நகரின் தெருக்கள், சுரங்கப் பாதைகளில் தோராயமாக 20 லட்சம் எலிகள் நடமாடுவதாக கணிக்கப்பட்டுள்ளது. 


2021ஆம் ஆண்டின் அமெரிக்க வீட்டுவசதி கணக்கெடுப்பு தரவின் புதிய தகவலின்படி, நகரத்தை ஒரளவு (எலிகளிடம் இருந்து) விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பெரிய அமெரிக்க மெட்ரோ நகர்ப்புற பகுதிகளில் அதிக எலிகள் காணப்படும் இடங்களில் நியூயார்க் மூன்றாவது இடம் பிடித்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எலிகள் தொல்லையால் தூக்கத்தைத் தொலைத்த பாஸ்டன் மற்றும் பிலடெல்ஃபியா ஆகிய பெருநகரங்கள் நியூயார்க்கை விடவும் அதிகமான எலித் தொல்லைக்கு உள்ளாகியுள்ளன.

No comments

Powered by Blogger.