Header Ads



கருக்கலைப்பு ஏற்படலாம் - குரங்கு அம்மை குறித்து எச்சரிக்கை


 குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.


இந்த முறைகள் அடிப்படைத் தடுப்பு முறையாக கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


பெரியம்மை மற்றும் சின்னம்மைக்கு இடையில் உள்ள ஒரு வைரஸால் குரங்கம்மை ஏற்படுகிறது. அது கொப்புளங்களாகத் தோன்றும், குரங்கம்மை அல்லது பெரியம்மை தடுப்பூசிகள் நாட்டில் இல்லை. எனவே, அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பேணுவது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.


இந்த நோய் தோலில் இருந்து தோல் மற்றும் வாயிலிருந்து வாய் உட்பட சாதாரண தொடர்புகள் மூலமாகவும், பாலியல் தொடர்பு மூலமாகவும் பரவக்கூடும். எனவே, பொதுமக்கள் தங்கள் நெருங்கிய தொடர்புகளை 21 நாட்கள் வரை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


8 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால் அது தீவிரமாக இருக்கும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பை கூட ஏற்படுத்தலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.


பெரியம்மை வைரஸ் 1985 இல் நாட்டிலிருந்து அழிக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மருத்துவர் தீபால் பெரேரா, காய்ச்சலுடன் கூடிய சொறி தோல் புண் போன்ற குரங்கம்மை போன்ற அறிகுறிகள் இருந்தால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகள் அல்லது வேறு எந்த பொது இடத்திற்கோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.