Header Ads



ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்தால் அல்லது விற்றால் இன்றுமுதல் மரண தண்டனை


ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் நச்சு பொருள் , அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 


இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் , குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது . 


நாடாளுமன்றத்தில் கடந்த 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நஞ்சுகள் , அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் ( திருத்தச் ) சட்டமூலம் இன்று ( 23 ) முதல் 2022 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க நஞ்சுகள் , அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் ( திருத்தச் ) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது . 


குறித்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டு , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சான்றுரைப்படுத்தினார் . 


போதைப்பொருளை கொண்டு வருதல் , வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது . 


இதேவேளை , கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த மாத முதல் வாரமளவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் , 103 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது . 

இதன்போது , 7,536 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments

Powered by Blogger.