Header Ads



ராஜபக்சவினர் மீண்டும் ஜனாதிபதியாக முயற்சி, மக்கள் இடமளிக்கக் கூடாதென்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்


22 ஆவது திருத்தத்தை ஆதரித்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி  முன்வைத்துள்ள 21 ஆவது திருத்தமே நாட்டுக்கு சிறந்தது எனவும்,அப்படியொரு நல்ல விடயம் இருந்தும் 22 ஆவது திருத்தத்தை கோட்டாபயவின் சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்காகவே ஆதரித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


மொட்டு அமைச்சுக் குழுக்களில் பல்வேறு சதித்திட்டங்கள் மேற்கொண்டு கடந்த காலங்களில்  மக்களுக்காக முன்நின்ற மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் சுயாதீன தலைவர்களை பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறு அரச அதிகாரத்தை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்றும், எப்போதும் மக்களுக்காகவே முன்நின்ற தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோரின் சுயாதீனத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்நிற்கும் என்றும், அந்த தலைவர்களின் கடமைகளில் தலையிடாமல் முடிந்தால் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார். 


ஐக்கிய மக்கள் சக்தியின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று(22) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


நல்லாட்சிக்காகவே 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தோமேயன்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி ரோஹினி மாரசிங்கவையோ அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவாவையோ வீட்டுக்கு அனுப்புவதற்காக அல்ல என்றும் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அவ்வாறு செயற்பட முற்பட்டால் எந்நேரத்திலும் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.


அத்துடன்,ராஜபக்ஷக்களின் அடிமையாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டொழிக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,இந்த நாட்டில் சுதந்திர மனிதனாக வாழ வழி செய்வதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ராஜபக்சவினர் இன்னும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவ்வாறான நிலைமை ஏற்பட இடமளிக்காமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என்றும்,   ராஜபக்சவினர் தமது குடும்பத்தில் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக்க முயல்வதாகவும்,இது மீண்டும் நாட்டை அழிப்பதற்கான முயற்சி எனவும் அவர் தெரிவித்தார்.


எந்த மனிதருக்கும் எந்த வேலையும் செய்ய முடியாத காலம் வரும் எனவும்,உடல் பலமும்,மனவலிமையும் குறைந்துள்ளதை உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதிகார மோகம் தன்னிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


இத்தருணத்தில் நாட்டில் பணவீக்கம்,வாழ்க்கைச் சுமை, ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை  அதிகரிப்பதாகவும், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,இவ்வாறான நிலையில் அரசாங்கம் பொருளாதாரத்தையும், தேவைகளையும் சுருங்கச் செய்வதாகவும், பொருளாதாரத்தையும் தேவையையும் அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவர முயல்வதாகவும், அது தவறான செயல் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,1988 காலப்பகுதியில் நாட்டில் 2 யுத்தங்கள் இடம்பெற்ற போதும் எவருக்கும் தலைசாய்க்காது தைரியத்துடன் சர்வதேச உறவுகளை சரியாகப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும்,தற்போதைய ஆட்சியாளர்கள் முறையான கொடுங்கள் வாங்கல் சட்டகங்களுக்கு புறம்பாக வெறுமனே கொடுங்கள் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, திரித்து வங்குரோத்து நாட்டை மேலும் வங்குரோத்தான நிலைக்கு தள்ள முயல்வது தேசிய அவலமாகும் என்றும், டொலரை கொண்டு வரும் சுற்றுலாத் துறை,தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு வரி விதிக்கப்படுவதாகவும், தற்போதைய அரசின் நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்யாது குழப்பம் நிறைந்ததாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.