Header Ads



ரணிலின் காலநிலை ஆலோசகர் பற்றி, கம்மன்பில கூறியுள்ள விடயங்கள்


 பிரிவினைவாதிகளின் டொலர்களை இலங்கையில் முதலீடு செய்வதை எதிர்க்கவில்லை எனவும் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி நாட்டை அனாதரவாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று -17- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


எமது தாய் நாட்டை துண்டாக்கும் பிரிவினைவாதிகளின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்று செயற்பட்ட சமாதான தரகர், எரிக் சொல்ஹெய்ம், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மீண்டும் களத்திற்கு வந்துள்ளார்.


சொல்ஹெய்ம் அறிந்த காலநிலை மாற்றங்கள் எதுவுமில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு நிதியை ஒதுக்கும் நோர்வேயின் கோரிக்கைக்கு அமைய எரிசக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.



எனினும் 22 மாதங்களில் எந்த பலன் தரக்கூடிய நடவடிக்கைகளையும் எடுக்காது, வெளிநாட்டு பயணங்களுக்காக 5 லட்சம் டொலர்களை செலவு செய்துள்ளார்.


இதன் காரணமக சுற்றாடல் நிபுணர்கள் மத்தியல் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் நிறுவன சட்டத்திட்டங்களை மீறியமை ஆகிய சம்பவங்களால், 2018 ஆம் ஆண்டு அவரை பதவி விலகுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அறிவித்தார்.


காலநிலை மாற்றங்கள் தொடர்பான மோசமான வரலாற்றை கொண்ட எரிக் சொல்ஹெய்ம் ஏன் ஜனாதிபதியின் ஆலோசகரானார்?. உண்மையில் அவரது பணி காலநிலை மாற்றம் குறித்து ஆலோசனை வழங்குவதல்ல.


பிரிவினைவாதிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே அவரது பணி


அவர் நன்கு அறிந்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே அவரது பணி. இலங்கைக்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்க முடியாது என இந்தியா அறிவித்துள்ளது.


சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருவதால், உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரை சீனாவின் உதவியும் கிடைக்காது. போர் ஒன்றில் சிக்கியுள்ளதால் ரஷ்யாவும் உதவ முடியாது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஐரோப்பாவாலும் உதவ முடியாது.


கடந்த காலத்தில் இருத்தரப்பு உறவுகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்ட ஜப்பான் கடனை மறுசீரமைக்க மாத்திரமே இணங்கியுள்ளது. கடனை மறுசீரமைக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியையும் எதிர்பார்க்க முடியாது.


இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பு தமிழ் பிரிவினைவாதிகள் மாத்திரமே. கப்பம் சேகரிப்பது விடுதலைப் புலிகள் வருமானம் பெறும் பிரதான வழியாக இருந்தது என்றே பலரும் நினைக்கின்றனர்.


எனினும் மனித கடத்தல், ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தொல்லியல் பொருட்கள் கடத்தல், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல், கப்பல் சேவை, உணவகங்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் மூலம் விடுதலைப் புலிகள் பணத்தை சம்பாதித்தனர் என்பதே கசப்பான உண்மை.


இவற்றில் சம்பாதித்த பணத்தை அவர்கள் போரில் ஈடுபடவும் ஈழத்தை நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தினர். புலிகளின் பொலிஸ், நீதிமன்றம் என்பன நினைவில் இருக்கின்றதா?. தொழில் வருமானம் கடந்த காலத்தில் போன்று அவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்து வருகிறது.


எனினும் 2009 ஆம் ஆண்டில் இருந்து இரண்டு பிரதான செலவுகள் இல்லை. இதனால், வருடாந்தம் டொலர்கள் மில்லியன் கணக்கில் சேமிக்கப்பட்டு, தற்போது பிரிவினைவாதிகளிடம் பல பில்லியன் டொலர் நிதி இருக்கின்றது.


பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை பெற்றுக்கொடுத்து அவர்களை மகிழ்வித்து, அவர்களிடம் இருந்து கடன் மற்றும் முதலீட்டை பெற்றுக்கொடுப்பதே எரிக் சொல்ஹெய்மின் பணி. பிரிவினைவாதிகளின் டொலர் என்றாலும் எமது நாட்டில் முதலீடு செய்தவதை நாங்கள் எதிர்க்கவில்லை.


எனினும் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி எமது நாட்டை அனாதரவாக்கி விட வேண்டாம் என அரசாங்கத்திற்கு கூறுகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள பட்டினியை போக்க, எமது நாட்டை மீண்டும் போர் நெருப்புக்குள் தள்ளிவிட்டால், அது மிகப் பெரிய குற்றமாகும் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.