Header Ads



திரிபோஷவில் நஞ்ச என்ற குற்றச்சாட்டை, மறுக்கும் சுகாதார அமைச்சர்


கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.


இந்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு, Hiru  பிரிவு வினவிய போது தெரிவித்தார்.


எவ்வாறாயினும், திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, குறித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


திரிபோஷ உற்பத்தி நடவடிக்கையின்போது, அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும், அதற்கமைய குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


திரிபோஷ தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.