Header Ads



முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நிரந்­தர அடை­யாளச் சின்­ன­ம் மஜ்மாநகர், இதனை பாது­காத்து, அதை புனித பூமி­யாகக் கருத வேண்டும்


மஜ்மாநகர் இலங்கை முஸ்லிம்களின் ‘ஆஸ்விற்ஸ்’ ஆகுமா?


- கலா­நிதி அமீ­ரலி -


ஜேர்­ம­னியின் ஆஸ்விற்ஸ் சித்­தி­ர­வதை முகாம் யூத இனத்­துக்கு ஹிட்லர் வழங்­கிய மயான பூமி. இன­வெறி கொண்ட ஹிட்­லரின் யூத இன ஒழிப்பின் நினைவுத் தல­மாக அது இன்றும் என்றும் விளங்கும். இன்று வாழும் யூத மக்­களும் இனிமேல் வாழப்­போகும் யூத சந்­த­தி­களும் கண்­ணீ­ருடன் தரி­சித்து மௌன அஞ்­சலி செலுத்தும் ஒரு வர­லாற்றுத் தலம் அது. ஜேர்­ம­னிக்குச் செல்லும் சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கும் அது ஒரு தரி­சனத் திட­லாக மாறி­யுள்­ளது. அவ்­வாறு தரி­சனம் செய்யும் ஒரு மயான பூமி­யாக இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ஓட்­ட­மா­வ­டியின் மஜ்­மா­நகர் மாறுமா? இக்­கட்­டுரை அதைப் பற்­றிய சில சிந்­த­னை­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கி­றது. அண்­மையில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான முகம்­மது பைரூஸ், ஆயிஷா நாஸீம், அம­லினி டி ஸைரா ஆகியோர் வெளி­யிட்ட மஜ்­மா­நகர் பற்­றிய ஒர் ஆய்­வ­றிக்­கையே இதனை எழுதத் தூண்­டி­யது. அவர்­க­ளுக்கு எனது நன்­றிகள்.


இன­வாதப் புற்­றுநோய்

இன­வாதம் சுதந்­திர இலங்­கையின் அர­சியல், சமூகப் புற்­றுநோய். அதை உண்­டாக்கி ஆறாது வளர்த்­த­வர்கள் அர­சி­யல்­வா­தி­களும் அர­சி­ய­லுக்குள் நுழைந்த பௌத்த குரு­மாரும் அவர்­களின் அடி­வ­ரு­டி­களும். அந்த அர­சி­யல்­வா­தி­களுள் முஸ்­லிம்­களும் அடங்­குவர். அந்தப் புற்­று­நோய்தான் இன்­றைய அர­சியல் நிலை­கு­லை­வுக்கும் பொரு­ளா­தாரச் சீர­ழி­வுக்கும் சமூக அமை­தி­யின்­மைக்கும் பிர­தான காரணம் என்­பதை வர­லாறு உணர்த்தும். அந்த உண்­மையை உணர்ந்த ஒரு புதிய இளம் சந்­ததி இன்று விழிப்­புற்­றெ­ழுந்து புரை­யோ­டிய புற்று நோயை அறுவை சிகிச்­சையால் அகற்றி நாட்­டுக்கு மறு­வாழ்வு வழங்க முன்­வந்­துள்­ளது. இது வர­வேற்­கப்­பட வேண்­டிய ஒரு விடயம். அது ஒரு புற­மி­ருக்க, இன­வாதம், அதிலும் குறிப்­பாகச் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் எவ்­வாறு கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்குள் ஒரு பேர­லை­யாக எழுந்து முஸ்­லிம்­களைக் குறி­வைத்து வீசி­யது என்­பதை சுருக்­க­மாக முதலில் விளக்க வேண்­டி­யுள்­ளது.


ராஜ­பக்­சாக்­களின் அர­சியல் மறு­வாழ்வு

2005 இலிருந்து பத்து ஆண்­டு­க­ளாக இலங்­கையின் ஜனா­தி­ப­தி­யாக மகிந்த ராஜ­பக்­சவும் பாது­காப்புச் செய­லா­ள­ராக அவ­ரது இளையோன் கோத்­தா­ப­யவும் இணைந்து செயற்­பட்­டபின், 2015 இல் நல்­லாட்சி அரசு என்ற பெயரில் மைத்­தி­ரி­பால சிரி­சே­னவை ஜனா­தி­ப­தி­யா­கவும் ரணில் விக்­கி­ரமசிங்­ஹவை பிர­த­ம­ரா­கவும் கொண்ட ஓர் ஆட்­சியை மக்கள் தெரிவு செய்­தனர். அந்தச் சோடியின் ஆட்சி போற்­றத்­தக்­க­வாறு எத­னையும் சாதிக்­காமல் 2019 இல் முற்றுப் பெறவே ராஜ­பக்ச குடும்பம் மீண்டும் அர­சி­யலில் குதித்­தது. இந்த மறு­வாழ்வில் மூத்­தவன் பிர­த­ம­ரா­கவும் இளை­யவன் ஜனா­தி­ப­தி­யா­கவும் கள­மி­றங்­கினர். அவர்­களின் தேர்தல் பிரச்­சா­ரத்தின் அடி­நா­த­மாக அமைந்­தது சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தமே. தமி­ழர்­களின் திமி­ரையும் எதிர்ப்­பையும் முறி­ய­டித்­து­விட்டோம், இப்­போது இஸ்­லா­மியத் தீவி­ர­வாதம் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் பௌத்­தத்­துக்கும் ஓர் எதி­ரி­யாக எழுந்­துள்­ளது, ஆகவே அத­னையும் தோற்­க­டிக்து நாட்டைக் காப்­பாற்­று­வ­தற்கு எங்­க­ளுக்குச் சந்­தர்ப்பம் தாருங்கள் என்ற தோர­ணை­யி­லேயே பொது­ஜன பெர­முன கட்­சி­யினர் வீடு­வீ­டாகச் சென்று பெளத்த சிங்­க­ள­வர்­களின் வாக்­கு­களைத் திரட்­டினர். அந்தப் பிரச்­சா­ரத்­துக்கு ஒரு வரப்­பி­ர­சா­த­மாக அமைந்­தது சஹ்­ரானின் தேசிய ஜமாஅத் கும்பல் 2019 இல் அரங்­கேற்­றிய ஈஸ்டர் குண்­டு ­வெ­டிப்புச் சம்­பவம். அந்தக் கும்­பலை யார் யார் எதனைக் குறி­வைத்து இயக்­கினர் என்­ப­து ­பற்­றிய உண்­மைகள் இது­வரை வெளி­வ­ரா­ததன் மர்மம் என்ன? இருப்­பினும், ஈற்றில் ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­ப­யவும் பொதுத் தேர்­தலில் மகிந்­தவின் கட்­சி­யி­னரும் அமோக வெற்­றியை ஈட்­டி­ய­தோடு ராஜ­பக்ச குடும்ப அர­சி­யலின் அடுத்த அத்­தி­யாயம் ஆரம்­ப­மா­யிற்று. அதன் பிறகு நடந்­த­தென்ன?


இஸ்­லா­மோ­போ­பி­யாவின் மறு­ம­லர்ச்சி


இஸ்­லாத்­தைப்­பற்­றிய அச்­சமும் பயமும் கலந்த ஒரு பிர­மையே இஸ்­லா­மோ­போ­பியா. அந்தப் பிரமை பல தசாப்­தங்­களின் பின் இலங்­கையில் மறு­ம­லர்ச்சி பெற்­றது ராஜ­பக்ச ஆட்­சி­யி­லேயே. 2009 இல் தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை முற்­றாகத் தோற்­க­டித்த பின்னர், வெற்­றி­மே­டையில் ஏறி­நின்று பேசிய ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச, ‘இனிமேல் இந்த நாட்டில் சிங்­க­ள­வர்­களோ தமி­ழர்­களோ முஸ்­லிம்­களோ இருக்­க­மாட்­டார்கள், இலங்­கையர் மட்­டுமே இருப்­பர்’ என்று கூறி­ய­போது அதை அங்­கி­ருந்த எல்­லோரும் ஆத­ரிக்­க­வில்லை என்­பதை சித­றலாய் எழுந்த கர­கோ­ஷங்கள் பறை­சாற்­றின. அதன் பிறகு அவர் அந்தக் கருத்தை வேறு எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் வெளிப்­ப­டுத்­த­வில்லை. அதற்குக் காரணம் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­களின் கருத்தில் இலங்­கையில் தமி­ழ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இட­மில்லை என்­பதே.


இலங்­கையை ஒரு தனிச் சிங்­கள பௌத்த நாடாக மாற்ற வேண்டும் என்ற சிந்­தனை 19ஆம் நூற்­றாண்டின் இறு­தி­யி­லி­ருந்தே அந­கா­ரிக தர்­ம­பால போன்ற தலை­வர்­களால் வித்­தி­டப்­பட்­டது. நாட்­டை­விட்டு முஸ்­லிம்­களை அரே­பி­யா­வுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோஷமும் அவ­ரி­ட­மி­ருந்தே ஆரம்­ப­மா­கி­யது. முஸ்­லிம்­களை இலங்­கையின் யூதர்­க­ளென்றும் சில சிங்­களப் பத்­தி­ரி­கைகள் அக்­கா­லத்தில் விப­ரித்­தன. அந்தச் சிந்­த­னையின் விளைவே 1915ஆம் ஆண்டு வெடித்த சிங்­க­ள -­முஸ்லிம் இனக்­க­ல­வரம். அதே போன்ற சிந்­தனை 2009க்குப் பின்னர் மீண்டும் புத்­துயிர் பெற­லா­யிற்று. 2014ல் வெடித்த அளுத்­கம கல­வரம் அந்தச் சிந்­த­னையின் எதி­ரொ­லியே. அதனைத் தடுப்­ப­தற்கு அப்­போது பாது­காப்புச் செய­லா­ள­ராகக் கட­மை­யாற்­றிய கோத்­தா­பய ராஜ­பக்ச எந்த நட­வ­டிக்­கை­யுமே எடுக்­க­வில்லை. அந்தக் கல­வ­ரத்தைத் தொடர்ந்து அம்­பாறை, திகன, கண்டி, கட்­டு­கஸ்­தோட்டை என்­ற­வாறு முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்கள் திட்­ட­மிட்­ட­வாறு அவிழ்த்­து­வி­டப்­பட்­டன. பொது­பல சேனா, ராவண பலய போன்ற பேரி­ன­வாத இயக்­கங்கள் அக்­க­ல­வ­ரங்­களை முன்­னின்று நடத்­தின. இவை­யெல்லாம் இஸ்­லா­மோ­போ­பி­யாவின் எதி­ரொ­லிகள் என்­பதை மறுக்க முடி­யாது. ஆனால் அவை கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­யா­குமுன் நடை­பெற்­றவை. அவர் ஜனா­தி­ப­தி­யா­கி­யபின் என்ன நடந்­தது?


இஸ்­லா­மோ­போ­பி­யாவின் உச்சம்

கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாக வந்­ததன் பின்பே இஸ்­லா­மோ­போ­பியா ஆட்சி பீடத்தின் அங்­கீ­கா­ரத்தை பெற்­றது எனக்­க­ரு­தலாம். 2020 இல் கேகாலை மாவட்டப் பள்­ளி­வா­ச­லொன்றின் வளா­கத்­தினுள் இர­வோ­டி­ர­வாகப் புத்தர் சிலை ஒன்று தோன்றி அது நீதி­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்­தையும் பெற்­றமை ஜனா­தி­ப­தியின் கண்­கா­ணிப்­பின்கீழ் என்­பதை மறக்­க­லாமா? மகர சிறைச்­சா­லை­யி­லி­ருந்த பள்­ளி­வா­சலை சிறைக் காவ­லர்கள் அப­க­ரித்து அதை அவர்­களின் ஓய்­வு­நேரக் களி­யாட்டக் கூட­மாக மாற்­றி­ய­போது ஜனா­தி­பதி கைகட்­டி­நின்­றதைத்தான் மறக்­க­லாமா? கூர­க­லையில் தப்தர் ஜெய்­லா­னியின் ஒரு பகு­தியை இடித்து நொறுக்­கி­யபின் அந்த இடத்தில் பௌத்­த­ வி­கா­ரையை விரி­வாக்க முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டதும் இந்த ஜனா­தி­ப­தியின் அனு­மதி இல்­லா­மலா? அவை மட்­டுமா? இஸ்­லா­மிய நூல்­களின் இறக்­கு­ம­திக்குத் தடை விதிக்­கப்­பட்­டதும் மத­ர­சாக்­களை அர­சாங்கம் கையகப்­ப­டுத்­த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டதும் அவரின் ஆட்­சி­யின்கீழ் அல்­லவா?


இவற்­றை­யெல்லாம் விட கொவிட் கொள்ளை நோயை இலங்­கைக்குக் கொண்­டு­வந்­த­வர்கள் தப்லீக் பிரச்­சா­ரத்­துக்குச் சென்­று­வந்த முஸ்­லிம்­க­ளென்று பேரி­ன­வா­திகள் கதை­யொன்றை அவிழ்த்­து­விட, அதனைத் தொடர்ந்து ஒரு மண்­ணியல் பேரா­சி­ரி­யையின் விநோ­த­மான அபிப்­பி­ரா­யத்தை ஆதா­ர­மாகக் கொண்டு, அந்தக் கொள்ளை நோயால் மர­ணித்­த­வர்­களை மண்­ணுக்குள் புதைத்தால் மண்­ண­டி­யி­லுள்ள நீர் வழி­யாக அந்த நோய் பர­வு­மென்று முடி­வு­கண்டு அந்த உடல்­களை தீயிட்டுக் கொழுத்த வேண்­டு­மென பங்­குனி மாதம் 2020 இல் வர்த்­த­மா­னி­மூலம் ஜனா­தி­பதி ஆணை­யிட்டார். இதனை அறிந்த மருத்­துவ நிபு­ணர்­களே அதிர்­சிக்­குள்­ளா­னார்கள். உலக சுகா­தார நிறு­வனம் உட­ன­டி­யாக அதனை கண்­டித்­தது.


அந்தப் பேரா­சி­ரி­யையின் போலி விஞ்­ஞானக் கண்­டு­பி­டிப்பு ஒரு புற­மி­ருக்க, சுமார் 1400 வரு­டங்­க­ளுக்கும் மேலாக உலக முஸ்­லிம்­களின் மத ஆசா­ரங்­க­ளி­லொன்று, அதா­வது மர­ணித்­த­வர்­களை பூமிக்குள் சகல மார்க்கச் சடங்­கு­க­ளுடன் அடக்­க­வேண்டும் என்ற நியதி இலங்­கை­யிலே இஸ்­லா­மோ­போ­பி­யாவின் ஆதிக்­கத்தால் சட்­டத்தின் மூலம் ஒரே நொடியில் நொறுக்­கப்­பட்­டது. இந்த மனித உரிமை மீறல் இலங்­கை­யி­லேதான் முதன் முதலில் நடை­பெற்­றது என்­ப­தையும் அறிதல் வேண்டும். என­வேதான் ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் ஆட்­சியில் இஸ்­லா­மோ­போ­பியா அதன் உச்­சத்தை எட்­டி­யது என்று கூறு­வதில் எந்தத் தவறும் இல்லை.


ஜனா­தி­ப­தியின் அதி­கா­ர­வ­லுவை அதி­க­ரிப்­ப­தற்­காக நிறை­வேற்­றப்­பட்ட அர­சி­யற்­சட்டத் திருத்­தத்­துக்கு வாக்­க­ளித்த உள்­நாட்டு முஸ்லிம் பிர­ப­லங்கள் பூத­வு­டல்­களின் கட்­டாய தக­னத்­தைக்­கண்டு முத­லைக்­கண்ணீர் வடித்­துக்­கொண்டு கைகட்டி வாய்­பு­தைத்து நிற்க, அத­னைக்­கண்­ணுற்ற வெளி­யு­லகு கண்­டனம் எழுப்பத் தொடங்­கி­யது. ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செய­லகம் மிகவும் கார­சா­ர­மான கண்­ட­னங்­களை முன்­வைத்­தது. உலக முஸ்லிம் அமைப்பும் சேர்ந்து கண்­டித்­தது. உலக அரங்கில் இலங்­கையின் பெயர் நாற்­ற­ம­டிக்கத் தொடங்­கவே ஒரு வரு­டத்தின் பின்னர் தகனக் கட்­டளை வாபஸ் பெறப்­பட்டு அடக்­கு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. அந்த அனு­ம­தியின் விளை­வாகப் பிறந்­ததே மஜ்மா நகர் மயானம்.


மஜ்மா நகர்: இஸ்­லா­மோ­போ­பி­யாவின் ஆஸ்விற்ஸ்

மண்­ணியல் பேரா­சி­ரி­யையின் தொற்­றுநோய் நிபு­ணத்­துவம் போலி என்­பதை உல­கமே சுட்­டிக்­காட்­டி­ய­போது அந்த நிபு­ணத்­து­வத்தை நேர­டி­யாக உத­றித்­தள்­ளாமல் இஸ்­லா­மோ­போ­பி­யா­வுக்கு வக்­கா­லத்து வாங்கும் போக்கில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதே அரசின் புதிய முடிவு. இதனை அரசின் விஷப்­ப­ரீட்சை ஒன்று அதன் அரங்கின் பின்­பு­றத்தில் அரங்­கேற்­றப்­பட்­ட­துபோல் தோன்­ற­வில்­லையா? கொவிட் நோயால் மர­ணித்த உடல்­களை எந்த மைய­வா­டி­யிலும் அடக்­கலாம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ளாமல் நாட்டின் வரண்ட பகுதி ஒன்­றில்­மட்­டுமே அடக்­கலாம் என்று கருதி கிழக்­கி­லங்­கையின் ஓட்­ட­மா­வ­டி­யை அரசு தெரிவு செய்­தது.


எனினும், ஓட்­ட­மா­வடிப் பிர­தேச சபை அடை­யா­ளம்­கண்ட ஒரு பகு­தியை ஏற்­காமல் இரா­ணு­வமும் அரசின் செய­லாளர் ஒரு­வரும் சேர்ந்து விவ­சா­யி­களும் கால்­நடை வளர்ப்­போரும் பயன்­ப­டுத்தும் மஜ்மா நகர் நிலத்தில் 21.5 ஏக்கர் நிலத்தை மயான பூமி­யாக மாற்­றினர். இந்த நிலம் வரண்ட பூமி­யல்ல என்­பதை உணர்ந்தால் அதனை எதற்­காகத் தெரி­வு­செய்­தனர் என்­பதன் இர­க­சியம் முஸ்லிம் மக்­களின் வாழ்­வா­தா­ரங்­களை நசுக்க வேண்டும் என்ற இஸ்­லா­மோ­போ­பி­யரின் எண்­ணத்தைப் புலப்­ப­டுத்­து­வ­தாக இல்­லையா?


ஒதுக்­கப்­பட்ட அந்த நிலத்தில் இது­வரை 10 ஏக்கர் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பங்­குனி 2021க்கும் பங்­குனி 2022க்கும் இடையில் 3600க்கும் அதி­க­மான பூத­வு­டல்கள் அங்கே அடக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றுள் மிகப்­பெ­ரும்­பான்மை முஸ்­லிம்­களின் உடல்­க­ளாகும். இலங்­கையின் எந்த இடத்தில் ஒரு முஸ்லிம் கொவிட் நோயால் மர­ணித்­தாலும் அந்த உடலை இரா­ணுவம் தன் செலவில் கொண்­டு­வர அந்த உட­லுக்­கு­ரிய உற­வி­னர்­களுள் ஓரி­ரு­வரே தமது சொந்தச் செலவில் மஜ்மா நகர் வந்து அதற்­கான இறுதி மரி­யா­தை­களைச் செய்யும் ஒரு துர்ப்­பாக்­கிய நிலையை இந்தப் புதிய கட்­டளை ஏற்­ப­டுத்­தி­யது. இதை­வி­டவும் கொடூ­ர­மான ஒரு மனச்­சித்­தி­ர­வதை ஒரு குடும்­பத்­துக்கு இனிமேல் ஏற்­ப­டுமோ தெரி­யாது. ஆனால் இது அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல் என்­பதை மறுக்க முடி­யாது.


என­வேதான் மஜ்மா நகர் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் பேரி­ன­வா­தி­களால் திட்­ட­மிட்டு அவிழ்த்­து­வி­டப்­பட்ட இஸ்­லா­மோ­போ­பி­யாவின் நிரந்­தர அடை­யாளச் சின்­ன­மாக இன்று மாறி­யுள்­ளது. இந்த மயான பூமியை முஸ்­லிம்கள் பாது­காத்து அதை ஒரு புனித பூமி­யாகக் கருதி அதன் சோக வர­லாற்றை சந்­ததி சந்­த­தி­யாகத் தமது வாரி­சு­க­ளுக்கும், சகோ­தர இனங்­க­ளுக்கும், வெளி­யு­ல­குக்கும் ஞாப­கப்­ப­டுத்த வேண்டும். அதைத்தான் ஜேர்­ம­னியின் ஆஸ்விற்ஸ் யூத­மக்­க­ளுக்­காகச் செய்து கொண்­டி­ருக்­கி­றது. உள்­நாட்டு வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கும் மஜ்மா நகர் மயானம் மௌன அஞ்­சலி செலுத்தும் தல­மாக மாற வேண்டும்.


ஓர் எச்­ச­ரிக்கை

மகர சிறைச்­சாலைப் பள்­ளி­வாசல் பறிபோய் மூன்று வரு­டங்­க­ளா­கின்­றன. அது பறி­போ­ன­போது அமைச்­சராய் இருந்த நிமல் சிறி­பால டி சில்வா அது­பற்றிப் பேசு­கையில் அப்­பி­ரச்­சி­னையைச் சுமு­க­மாகத் தீர்த்­து­வைப்­ப­தாகக் கூறினார். அந்தத் தீர்வின் லட்­ச­ணத்தை இனியும் சொல்ல வேண்­டுமா? இப்­போது அங்­குள்ள முஸ்லிம் மைய­வா­டியும் பறி­போகும் ஆபத்­துள்­ள­தாக அறி­கிறோம். இதுவும் இஸ்­லா­மோ­போ­பி­யர்­களின் திட்­ட­மிட்ட ஒரு சதியோ என எண்ணத் தோன்­று­கி­றது. அந்த ஆபத்து படிப்­ப­டி­யாக நாட்டின் ஏனைய பகு­தி­களின் மைய­வா­டி­க­ளுக்கும் ஏற்­ப­டு­மாயின் கால­வோட்­டத்தில் மஜ்மா நகரே அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரே முஸ்லிம் மையவாடியாக மாறுமோ?


பேரி­ன­வாதம் தலை­வி­ரித்­தாடும் வரை சிறு­பான்மை இனங்­க­ளுக்கு நிம்­ம­தியே இருக்­காது. ஒரு புதிய ஜனா­தி­ப­தி­யின்கீழ் அரசு இயங்­கி­னாலும் அவரும் பேரி­ன­வாதக் கும்­பலின் சிறைக்­கை­தி­யா­கவே இருக்­கிறார் என்­பதை உண­ர­வேண்டும். எனவே இன­வாதப் புற்று நோயை அறுவை சிகிச்சை செய்து அகற்­றாத­வ­ரை ஜன­நா­யகம் என்­பது ஓர் அர­சியல் பம்­மாத்­தா­கவே இருக்கும். அத­னா­லேதான் இளைய தலை­மு­றை­யினர் “கோத்­தாவே வீட்­டுக்குப் போ” என்ற கோஷத்­துடன் தமது போராட்­டத்தை ஆரம்­பித்து அர­சி­யலில் அடிப்­படை மாற்றம் தேவை எனக் கோரினர். அந்தப் போரா­ளி­களை சிறையில் அடைப்­பதால் போராட்டம் ஓய்ந்­து­விட்­ட­தாகக் கரு­த­மு­டி­யாது. அது மீண்டும் வேறு தோற்­றத்தில் உரு­வா­கலாம். அவ்­வாறு உரு­வா­கும்­போது சிறு­பான்மை இனங்கள் அதிலும் குறிப்­பாக முஸ்­லிம்கள் அதற்குப் பூரண ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும். அந்தப் போர­ாளி­களின் வெற்­றி­யி­லேதான் முஸ்லிம்களுக்கு சுபீட்சமுண்டு. இதை முஸ்லிம் அரசியற் பிரபலங்கள் உணர்வார்களா? – Vidivelli

No comments

Powered by Blogger.