Header Ads



பிறந்து 7 நாட்களேயான சிசு 50,000 ரூபாவுக்கு விற்பனை - இருவர் கைது


அனுராதபுரத்தில் பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


குழந்தையின் தந்தையினால், இந்த விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, குழந்தையின் தாய் மேற்கொண்ட முறைப்பாட்டுகமைய, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


குழந்தையை விற்பனை உதவியதாக கூறப்படும் தாதி ஒருவரின் கணவரும், அதனை விலைக்கு வாங்கிய பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபரான தந்தை (40) குறித்த பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் 40 வயதுடைய ஆண் ஒருவருடன் ஒன்றாக வசித்து வந்த கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே இந்த குழந்தையை பிரசவித்துள்ளார்.


சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.