Header Ads



170 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மியன்மார்


170 மில்லியன் ரூபாய் (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் மியன்மார் வெள்ளை அரிசியை இலங்கைக்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளதாக யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகம், இன்று (06) தெரிவித்துள்ளது.


மியன்மாரின் யாங்கூனில் உள்ள ஆசிய உலக துறைமுக முனையத்தில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


மியன்மார் மத்திய வர்த்தக அமைச்சர் யு. ஆங் நைங் ஓவினால், மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவிடம் அரிசித் தொகுதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


இச்சலுகையை ஏற்றுக்கொண்ட தூதுவர், சவாலான நேரத்தில் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியமைக்காக மியன்மார் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.


கடந்த ஜூன் 07ஆந் திகதி நடைபெற்ற நற்சான்றிதழ் வைபவத்தின் போது மியன்மாரின் சிரேஷ்ட பொது அமைச்சர் ஆங் ஹ்லேயிங்கிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்த போதும், மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73ஆவது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் போதும் தூதுவர் ஜனக பண்டார விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.


இந்த சரக்கு செப்டெம்பர் 04ஆந் திகதி அனுப்பப்பட்டதுடன், செப்டெம்பர் மாத இறுதிக்குள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

1 comment:

  1. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மியன்மார் இலங்கையைவிட பலமடங்கு வறுமையில் வாடிய நாடு. உலகில் அதிகமான பிச்சைக்காரர்கள் வாழும் நாடு. இன்றும் அந்த நாட்டுக்கு உல்லாசப்பிரயாணிகள் உற்பட பல்வேறு நோக்கங்களுக்காக அந்நாட்டுக்குப் பயணம் செய்யும் வௌிநாட்டவர்களை எதிர்நோக்கும் முக்கிய சவால் பிச்சைக் காரர் தொல்லையாகும். பக்கீர் மிஸ்கீனுக்கு உதவி செய்வது போல மியன்மார் 1000 மெற்றிக் டொன் பச்சை அரிசை இலங்கைக்கு இனாமாக கொடுத்து உதவும் நிலைக்கு மியன்மார் பொருளாதாரத்தில் முன்னேறி இலங்கை மியன்மாரைவிட பொருளாதாரத்தில் அதள பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த உதவிகளைப் பெறத் தயாராக இல்லை. அவர்களின் வியாபாரம், பொருளாதார உழைப்பு முயற்சிகள், விவசாயம் போன்றவற்றுக்கு தேவையற்ற அரச தலையீடு இன்றி அவர்களாக உழைத்து வாழும் நிலைமையை உருவாக்கித் தருமாறு கேட்பது தவிர எந்த காரணம் கொண்டும் வௌிநாடுகள், வறிய நாடுகளில் இருந்து பிச்சை வாங்கி எங்களுக்குச் சாப்பாடு போடுமாறு பொதுமக்கள் தற்போது அல்லது எந்தக் காலங்களிலும் கேட்டதில்லை. மக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகளையும் இடையூறுகளையும் விளைவித்து அவர்களின் விவசாயம்,வியாபாரத்தை முடக்கி அரசாங்கம் ஏன் பிச்சை வாங்கி மக்களுக்கு உணவளிக்க முயற்சி செய்கின்றது என்பது பொது மக்களுக்குத் தெரியாது. அத்தகைய நிலைமையை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களையும் உருவாக்கியர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றார்கள். சர்வதேச மட்டத்தில் இந்த நாட்டு மக்களை அவமானப்படுத்தும் இழிவு படுத்தும் இந்த கேவலத்தை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். இத்தகைய இழிவுக்குக் காரணமாகவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். பரஸ்பர நாடுகளுக்கிடையில் உறவு, பொருளாதார, கல்வி, கலாசார, உறவுகளை வளர்க்கும் பணிக்காக நியமிக்கப்படும் இலங்கைத் தூதுவர்கள், கவுன்ஸிலர் ஜெனரல்கள் விரும்பியோ அவர்கள் விரும்பாமலோ பிச்சை வாங்குபவர்களின் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இது இராஜதந்திர புத்தகத்தில் எந்தப்பக்கங்களிலும் இல்லாத இலங்கை அரசியல்வாதிகளால்,இலங்கை மந்தி(ரி)களால் இராஜதந்திர புத்தகத்தில் இணைத்த ஒரு கேவலம் கெட்ட அத்தியாயம். இதனை இராஜதந்திர புத்தகத்தில் இருந்து மிக அவசரமாக நீக்கப்படல் வேண்டும். இலங்கையைச் சிங்கப்பூராக மாற்றுவோம் என பம்போரி அடித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்த மந்தி(ரி)களும் அதே பாரம்பரிய கேவலத்தைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.