Header Ads



அனைத்து ராஜபக்சவினரையும் விட, ஜனாதிபதி ரணில் மிக மோசமான சர்வாதிகார ஆட்சியாளர்


 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக மோசமான சர்வாதிகார ஆட்சியாளர் எனவும் பல்லைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.


குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அழைப்புக்கு அமைய இன்று -20- வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த போதே ஹிருணிகா இதனை கூறியுள்ளார்.


என்னை விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு வந்து அழைப்பாணை ஒன்றை வழங்கினர். அதில் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. போராட்டம் சம்பந்தமாக என்னை விசாரணைக்கு அழைத்துள்ளதாக நினைக்கின்றேன்.


போராட்டத்தின் புண்ணியத்தில் தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்தார். தற்போது போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏதேனும் ஒரு காரணத்திற்காக அழைத்து விசாரணை நடத்துகின்றனர்.


என்னை எதற்காக அழைத்திருக்கின்றனர் என்று போய் பார்ப்போம். காரணம் என்னவென்று அறிந்து நான் எனது வாக்குமூலத்தை வழங்குவேன்.


அமைதியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எங்களால் எவருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. தொந்தரவு ஏற்பட்டது என்றால், ராஜபக்சவினருக்கே ஏற்பட்டது.


அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க நேரிட்டது. சாதகமான நிலைமை ஏற்பட்டது என்றால், அது ரணில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டது. அவர் முன்னெடுத்து வரும் இந்த அடக்குமுறையை நாங்கள் அருவருப்புடன் கண்டிக்கின்றோம்.


வசந்த முதலிகே நேற்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள். பயங்கரவாத யுத்தம் 2009 ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது.


பல்கலைக்கழக மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது கவலைக்குரிய விடயம்.


இதுவரை உருவான அனைத்து ராஜபக்சவினரை விட, இதுவரை ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளை விட இலங்கையில் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ரணில் ராஜபக்ச மிக மோசமான சர்வாதிகாரமான ஆட்சியாளர்.


இது வரலாற்றில் பதிவாகும். இதுதான் உண்மையான கதை.  ரணில் விக்ரமசிங்கவுடன் எனக்கு இருந்து வந்த நட்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.