Header Ads



கோட்டாபயவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவர, அவருடைய நெருங்கிய சகாக்கள் முயற்சி - உதயங்க வீரதுங்க


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயற்சி செய்து வருகின்றது.


கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன், அவரை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமராக நியமிக்க திட்டமிடப்பட்டு வருகின்றமை குறித்த தகவல் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்த கட்சியுடன் தொடர்புடையவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.


உதயங்க வீரதுங்க வெளியிட்ட கருத்து

கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு அவருடைய நெருங்கிய சகாக்கள் செயற்பட்டு வருவதாக ராஜபக்ஷவின் உறவினரும், ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.


''அவரை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு அவருடன் தொடர்புடையவர்கள் எதிர்பார்த்துள்ளனர். தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்தில் அழைத்து வருவதற்கும், பிரதமர் ஆசனம் அல்லது ஏதோ ஒரு ஆசனத்தை வழங்க முயற்சிக்கின்றார்கள். ஆனாலும், பொதுஜன பெரமுன அல்லது அரசாங்கத்தில் உள்ளவர்கள் அதற்கு இணங்குவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. எனினும், அவருடன் இருந்தவர்கள் அதனை எதிர்பார்க்கின்றனர். அவரது ஆழ் மனதிலும் அந்த எண்ணம் இருக்கின்றது" என உதயங்க வீரதுங்க குறிப்பிடுகின்றார்.

No comments

Powered by Blogger.