Header Ads



தண்டனை சட்டக்கோவை திருத்தத்திற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு


இலங்கையில் உள்ள LGBTQ+ சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தண்டனை சட்டக்கோவை திருத்தத்திற்கான சட்டமூலம் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேமநாத் சி.தொலவத்தவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.


தண்டனை சட்டக்கோவை (திருத்தம்) (19வது சட்டம்) தண்டனை சட்டக்கோவையில் திருத்தம் செய்வதற்கான இந்த சட்டமூலம் நேற்று (23) சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்தவினால் தனிநபர்  பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


LGBTQ + சமூகம் தொடர்பாக இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய சிந்தனை காணப்படுவதோடு, இதன் காரணமாக, அன்றாட வாழ்க்கையில் மட்டுமன்றி, அரச மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களிலும் கூட, இந்த சமூகம் பல்வேறு வகையான வன்முறை, அடக்குமுறை மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும், சில சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் கூட இந்த சமூகம் தொடர்பில் மீறப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.


பாலியல் முனைப்புகள் மற்றும் பாலியல் அடையாளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தனிநபர்களுக்கு தண்டனை வழங்கும் செயற்பாடு விக்டோரியா காலத்தில் காலனித்துவ சட்ட கட்டமைப்புகளின் வாயிலாக உலகம் முழுவதும் பரவியது. ஆனால் நவீன மனநல மருத்துவத்தில், இது ஒரு குற்றமாகவோ அல்லது வக்கிரமாகவோ கருதப்படவில்லை. மேலும், அபிவிருத்தி அடைந்த நாடுகள் இந்த சமூகத்தை தண்டிக்கும் மற்றும் அவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் மற்றும் விதிகளைத் திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்தவினால் இந்த தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-24

No comments

Powered by Blogger.