Header Ads



அரசாங்கத்திற்குள் மேலும் பிளவு, பசிலை இலக்குவைக்கும் 22 க்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு


இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22வது திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் திருத்ததிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சரத்துடன் 22ம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சித்தால் அதற்கு எதிராக வாக்களிக்க சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஒருவரை குறிவைத்து இந்த சரத்து புகுத்தப்பட்டுள்ளதாகவும், தனிநபர்களை இலக்கு வைத்து இவ்வாறான சரத்துக்களை அரசியலமைப்பில் உள்ளடக்குவது நியாயமானதல்ல என அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது 22ஆவது திருத்தச் சட்டமூலம்பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களின் ஆதரவு அவசியமானது. இதேவேளை, இரண்டரை வருடங்களின் பின்னர் பொதுத் தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வரும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை நான்கரை ஆண்டுகளாக திருத்துவதற்கான பிரேரணையை பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சமர்ப்பிக்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 22ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் போது, ​​பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பத்தின் பேரில் வாக்களிக்க அனுமதிக்கும் யோசனையை கட்சிக்கு சமர்ப்பிக்க சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


காவியன்

No comments

Powered by Blogger.