Header Ads



ஹரீனுக்கு பதிலாக நியோமலும், நளீனும் களமிறக்கம் - சஜித் அதிரடி


முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா வத்தளை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் மாவட்டத்திலிருந்து முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கீழ் வெளி விவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அவர் அர்ப்பணிப்புடன்  செயற்பட்ட ஒருவராவார்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்துகொண்டு அரசுப் பக்கம் தாவி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்ட ஹரின் பெர்னாண்டோவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தனது செயற்பாட்டின்மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

இதன்படி இதுவரை ஐக்கிய மகக்ள் சக்தியின் செயற்பாட்டுப் பொறுப்பாளராக இருந்த ஹரின் பெர்னாண்டோவின் பதவி குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நியமனம் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் இன்று (02) கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, கட்சியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக இருப்பதுடன், பிரதிப் பொதுச் செயலாளராகவும், எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளராகவும், சமகி கோவி பலவேகவின் தேசிய அமைப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.  



No comments

Powered by Blogger.